Saturday, March 7, 2009

முதல் இடத்தில் இந்தியா - பாகம் 1

நம்மை விஞ்ச எந்த நாடும் இல்லை. அமெரிக்கா முதல் ஐந்து இடத்திற்குள் கூட இல்லை. இதை ஒலிம்பிக் போட்டியில் வைத்திருந்தால் தங்கப்பதக்கம் நமக்கே நமக்கு. அதை விட உலகத்திலுள்ள எல்லா நாடுகளும் சேர்ந்து கூட இந்தியாவை முந்த முடியவில்லையாம். நிரம்ப மகிழ்ச்சியா அல்லது இந்திய வறுமையைப் பற்றி நான் கிண்டலாக குறிப்பிடுவதாக எண்ணுகிறீர்களா?.

உலக நாடுகள் அனைத்தையும் சேர்த்தாலும் அதை விட கூடுதலாக சுவிஸ் வங்கிகளில் பணம் வைத்திருப்பது இந்திய நாட்டினர்தான். இரண்டாவதாக உள்ள ரஷ்யா இந்தியாவை விடவும் நான்கு மடங்கு குறைவு. என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?

உலக நாடுகள் கொடுத்த கெடுபிடிகளின் காரணமாக, தனது நாட்டில் கணக்கு வைத்திருப்போரின் தகவல்களைத் தர சுவிஸ்நாடு தற்போது தயாராக இருக்கிறது. ஆனால் அதை அந்தந்த அரசாங்கங்கள்தான் கேட்டுப் பெற வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளது.

நம் அரசு கேட்குமா? ஏன் கேட்காது என்பதற்கு காரணங்களை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? நம் அரசை கேட்கச் செய்ய நாம் அழுத்தமான இயக்கமாக இயங்க வேண்டும். இதை எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பது நல்ல இந்தியனின் முன்னுள்ள முக்கிய கடமை. நேர்மையான இந்தியரே! தார்மீகப் பொறுப்பு ஏற்க முன் வாருங்கள்.

இந்தியா ஏழை நாடா? யார் சொன்னது? சுவிஸ் வங்கிகளிடம் கேட்டுப் பாருங்கள். இந்திய கள்ளக் கணக்கு சொத்தின் மொத்த மதிப்பு 1500 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது இந்தியாவின் வெளிநாட்டுக் கடனை 13ஆல் பெருக்க வரும் தொகை. அதாவது 13 மடங்கு. இந்தப் பணத்தைக் கொண்டு 45 கோடி மக்களுக்கு, ஆளுக்கு ஒரு இலட்சம் தர இயலும். இப்போது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா?


இவ்வளவு பெரிய தொகையும் நேர்மையற்ற தொழிலதிபர்கள், ஊழல் அரசியல்வாதிகள், இலஞ்ச இலாவண்யத்தில் ஊறித் திளைக்கும் IAS, IRS, IPS அதிகாரிகள் ஆகியவர்களால் வைக்கப்பட்டுள்ளது. இவை மக்களைச் சுரண்டியதாலும் ஏமாற்றியதாலும் வந்தவை. சுரண்டப்படும் அந்த ஏழைக்குச் சொந்தமானவை. சிந்தியுங்கள்!!! அவை உனக்கும் எனக்குமானவை, இந்திய மக்களுக்குச் சொந்தமானவை!.

இந்தப் பணம் முழுதும் திரும்ப பெறப்பட்டால் 24மணி நேரத்துக்குள் இந்தியக் கடனை அடைத்து விடலாம். மிகுதியுள்ள 12மடங்கு தொகையையும் வருவாய் வரும் நல்ல வழிகளில் முதலீடு செய்தால், வரும் லாபம் மட்டுமே இந்திய அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் தொகையை விட கூடுதலாகும். எல்லா வரிகளையும் நீக்கி விட்டாலும் கூட இந்தியாவை சுலபமாக வழி நடத்த முடியும்.

"ஒரு ஆண்டில் சுமார் 80000 பேர் சுவிஸ் நாட்டுக்குப் போகிறார்கள். அவர்களில் 25000 பேர் அடிக்கடி போகின்றார்கள். இவர்களனைவரும் சுற்றுலாவுக்காக மட்டும் செல்லவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. வேறு என்ன காரணம்?" என்று தவறான பணப்புழக்கத்தை கண்காணிக்கும் துறையின் ஒரு அதிகாரி கேட்கிறார். அவர் கேட்பது, World Trade Organisationல் நடக்கும பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக இருப்பதால் ஜெனீவாவுக்கு தொடர்ந்து போய் வந்து கொண்டிருக்கும் வணிக அமைச்சின் அரசதிகாரிகளைப் பற்றியதல்ல என்பது புரிகிறதா?.

நேர்மையற்ற தொழிலதிபர்கள், ஊழல் அரசியல்வாதிகள், இலஞ்ச இலாவண்ய அதிகாரிகள், கிரிக்கெட்காரர்கள், சினிமா நடிகர்கள், செக்ஸ் வியாபாரிகள், பாதுகாக்கப்பட்ட உயிரினக் காவலர்கள் போன்றவர்கள் இந்தியாவின் சொத்து சுகத்தை சூறையாடி எவ்வளவு குவித்துள்ளார்கள் என்பதை மேலும் படியுங்கள். இங்கே சொல்லப்பட்டிருப்பது சுவிஸ்நாட்டு கணக்கு மட்டும்தான். மற்ற வெளிநாட்டு வங்கி கணககுகள்??

சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்புப்பணம் பற்றிய Swiss Banking Association உடைய 2006ம் ஆண்டு அறிக்கையின் படி சுவிஸ் நாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள வெளிநாட்டவர் தொகை.


முதல் ஐந்து இடங்கள்:
1. இந்தியா - 1456 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
2. ரஷ்யா - 470 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
3. U.K. - 390 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
4. யுக்ரைன் - 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
5. சீனா - 96 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

மற்ற உலக நாடுகளிலுள்ளோர் வைத்துள்ள தொகையை கூட்டினாலும் இந்தியர்கள் வைத்துள்ள 1456பில்லியன் அல்லது 1.4 ட்ரில்லியன் டாலர்களைத் தொடுகிறதா? கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.


No comments: