Thursday, September 30, 2010

அயோத்தி - ஒரு நிஜ பார்வை...

தலைநகர் தில்லியிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி நகர். இது 7-ம் நூற்றாண்டில் பல கோயில்களை உள்ளடக்கி கோயில் நகரமாக இருந்தது என்று சீனத் துறவி யுவான் சுவாங் தனது குறிப்புகளில் தெரிவித்துள்ளார். அங்கு ராமர் கோயில் இருந்ததாக 12-ம் நூற்றாண்டு குறிப்புகள் தெரிவிக்கின்றன.

1527: மொகலாய மன்னர் பாபர் இந்தியா மீது படையெடுத்தார். அவர் பல ஹிந்து மன்னர்களை வெற்றிகண்டார். தான் வெற்றிகண்ட பகுதிகளில் ஆட்சிபுரிய ஜெனரல் மீர் பாகியை வைஸ்ராயாக நியமித்தார். மீர் பாகி அயோத்திக்கு 1528-ல் வருகை தந்தார். சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் பாபரின் பெயரை அந்த மசூதிக்கு சூட்டினார்.

1853: சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு நடத்துவது தொடர்பாக ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அந்த நேரத்தில் சீதா ரசோய் (சமையல் கூடம்), ராம் சபூத்ரா (வேள்விக் கூடம்) கட்டப்பட்டன.

1855 வரை சர்ச்சைக்குரிய இடத்தில் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் வழிபாடு நடத்தி வந்துள்ளதாக பிரிட்டிஷ் காலனி ஆட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

1859: ராமஜென்ம பூமியில் ஹிந்துக்கள் வழிபட தனி இடமும், முஸ்லிம்கள் வழிபட தனி இடமும் ஒதுக்கி பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கம்பி வலை அமைத்தனர்.

1936-ம் ஆண்டுக்குப் பின் சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லிம்கள் வழிபாடு நடத்தவில்லை என்று ஹிந்துக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

1949 டிசம்பர் 22: சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலை வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் அந்த இடத்துக்கு உரிமை கோரி நீதிமன்ற படி ஏறினர். அப்போது சர்ச்சைக்குரிய இடமாக அறிவிக்கப்பட்டு வளாகத்துக்கு பூட்டுப் போடப்பட்டது.

1950: கோபால் சிங் விஷாரத் மற்றும் மஹந்த் பரமஹம்ச ராமச்சந்திர தாஸ் ஆகிய இருவரும் ராமர் சிலையை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று ஃபைஸôபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது உள்பகுதி பூட்டப்பட்டது. ஆனால் வளாகத்தில் பூஜை நடத்த அனுமதிக்கப்பட்டது.

1959: நிர்மோஹி அகடா என்ற ஹிந்து அமைப்பினர் மற்றும் மஹந்த் ரகுநாத் ஆகியோர் ஒரு வழக்கு தொடர்ந்தனர். சர்ச்சைக்குரிய இடத்தில் பூஜை செய்ய தாங்கள்தான் உரிமை உள்ளவர்கள் என்று அவர்கள் கோரினர்.

1961-ல் சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியம் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள மசூதிக்கு உரிமை கொண்டாடியதோடு அதனைச் சுற்றியுள்ள இடம் சமாதி என்று கூறியது.

1986: ஃபைஸôபாத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஹரிசங்கர் துபே என்பவர் தொடர்ந்த வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு நடத்த பிப்ரவரி 1-ல் அனுமதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பூட்டுகள் திறக்கப்பட்டன. இதையடுத்து முஸ்லிம்கள் சார்பில் பாபர் மசூதி நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது.

1989: நவம்பர் 9-ம் தேதி ராமர் கோயில் கட்ட பூமி பூஜைக்கு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அனுமதியளித்தார். இதே ஆண்டில் மசூதியை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி வி.எச்.பி. முன்னாள் துணைத் தலைவர் நீதிபதி தேவகி நந்தன் அகர்வால் வழக்குத் தொடர்ந்தார்.

2002: சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளதா என ஆய்வு செய்யுமாறு தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அயோத்தி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளும் இணைக்கப்பட்டு அவற்றை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டது.

2010: இந்த பெஞ்ச் தனது விசாரணையை கடந்த 2 வாரங்களுக்கு முன் நிறைவு செய்து செப்டம்பர் 24-ல் தீர்ப்பு என்று அறிவித்தது. ஆனால் தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய மனுவை விசாரிப்பதற்காக தீர்ப்பு வெளியிட ஒரு வாரம் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.
இந்தத் தடை உத்தரவை செப்டம்பர் 28-ம் தேதி விலக்கிக் கொண்டதோடு ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தீர்ப்பு :

அயோத்தி உரிமை தொடர்பான நான்கு வழக்குகளில் நீதிபதி அகவர்வால், எஸ்.யு.கான் மற்றும் டி.வி.ஷர்மா ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. மூன்று நீதிபதிகளின் தீர்ப்பும் தனித்தனியே வெளியிடப்பட்டன.

அதன் முக்கிய அம்சங்களாவன:
* சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களும் முஸ்லிம்களும் பிரித்துக்கொள்ள வேண்டும்.
* சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தது உண்மையே என்று இரண்டு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
* சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும். (1/3 என்ற விகிதம்)
* மூன்றாக பிரிக்கப்படும் நிலத்தின் ஒரு பகுதி - நிர்மோகி அகாரா அமைப்புக்கும், இரண்டாவது பகுதி - பாபர் மசூதி கமிட்டிக்கும், மூன்றாவது பகுதி - இந்து மகா சபைக்கும் பிரித்து வழங்கப்பட வேண்டும்.
* நிலத்தை பிரிக்கும் நடவடிக்கை, மூன்று மாதங்களுக்குள் தொடங்கப்பட வேண்டும்.
* அவ்வாறு, மூன்றாக பிரிக்கப்படும் வரை தற்போதை நிலை தொடர வேண்டும்.
* சர்ச்சைக்குரிய நிலத்துக்கு உரிமை கோரிய இந்து மகா சபை மற்றும் சன்னி வஃபு வாரியத்தின் மனுக்கள் தள்ளுபடி.
* 1949 டிசம்பர் 22-ல் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலை அகற்றப்படக் கூடாது.
* சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம், இரண்டு சமூகத்துக்குமே சொந்தம் என்றார், நீதிபதி எஸ்.யு.கான்.

Thursday, September 23, 2010

உறுப்பு தானம்

உடல் உறுப்பு தானம்... இந்த வாக்கியத்தை பல இடங்களில், பல முறை, பல பேர்களின் மூலம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் நான் எனது வலை பூவில் இப்படியொரு இக்கட்டான நிலையில் 'உறுப்பு தானம்' என்னும் மிக சிறந்த மனிதாபிமானத்தை தெரிய படுத்துகிறேன்.

அருள்பிரகாஷ் என்னும் நண்பனின் மாமா திரு.கே.பாலச்சந்தர் சாலை விபத்து ஒன்றில் மிக பலமாக காயமடைந்தார்.தீவிர பரிசோதனைக்கு பிறகு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்து, உயிர் பிழைப்பது கடினம் என்றும், ஓரிரு நாட்களில் இறந்து விடுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்து, avarin இருதயம், நுரையீரல், கண்கள், சிறு நீரகங்கள் உயிருக்கு போராடும் சிலருக்கு பொறுத்தப்பட்டது.
பாராட்டப்பட வேண்டியவர் அவர் மட்டுமல்ல, அவரது குடும்பமே...
மிக அவசரமாக இந்த செய்தியை தெரியபடுத்துவதால், உறுப்பு தானம் பற்றிய அறிய விஷயங்களை அடுத்து வரும் பதிவுகளில் சேகரித்து தருகிறேன்...

Monday, September 6, 2010

அவனும் அவளும்

அவன்
சிணுங்கும் அலைபேசியை

செல்லமாய் எடுத்தனைக்க

யாரோ ஏதோ எதற்கோ பேச

தாமரை இலை தழுவும் நீராய்

ஒட்டாமல் பேசி ஓய்ந்து போக

அதிசயமாய் மிளிர்கிறது உன் பெயர்

அமிர்தச் சுவை தேடி அள்ளி

காது மடல் கவ்வ

கசப்பாய் விழுகிறது வார்த்தை

அடடே, உனக்கு வந்திடுச்சா

மாத்தி பண்ணிட்டேனா”துடிதுடிக்கத்

துண்டிக்கிறாய் இணைப்பை

கூடவே நம்பிக்கை நரம்பையும்

அவள்

சிணுங்கும் இதயத்தை செல்லமாய் தட்டி

அமைதிப்படுத்தி நின்று, நிதானமிழந்து

உன் எண் ஒத்திஏதோ இணைப்பில் இருக்கும்

உன்னை தொடமுடியாமல் துவண்டு

இன்னொரு முயற்சியில் இணையும் இணைப்பில்

காது மடலோடுஇனிக்கும் உன் குரல்தேட

பதட்டத்தில் உதடு உதறி

பொய் உதிர்கிறது ”அடடே, உனக்கு வந்திடுச்சா,

மாத்தி பண்ணிட்டேனா” துவண்டு துண்டிக்கிறேன்

இணைப்பை தோல்வி வலையில் இறுக பிணைந்தபடி

---- ஈரோடு கதிர் -----