பள்ளி வேனை ஒட்டி வந்த டிரைவருக்கு லைசன்ஸ் கிடையாதாம்! செல்போன் பேசிக்கொண்டு வந்ததால் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறது..விபத்து நடந்தவுடன் டிரைவர் ஓடிவிட்டார்....
கிளீனர் தான் குழந்தைகளை காப்பாற்றி இருக்கிறார்... வேனுக்குள் இருந்த ஆசிரியை சுகந்தி வேனுக்குள் இருந்து வெளிவர முடியாத சூழலிலும் கண்ணாடியை உடைத்து குழந்தைகளை வெளியில் அனுப்பி கிளீனர் உதவியுடன் காப்பாற்றி இருக்கிறார்...
பதினோரு குழந்தைகளை தான் அவரால் காப்பாற்ற முடிந்தது....அவருக்கு நீச்சல் தெரியாததால், அவரும் அந்த குலத்திலேயே மூழ்கி இறந்து விட்டார்.... தனது உயிரை பொருட்படுத்தாமல், தனக்கு நீச்சல் தெரியாத நிலையிலும் குழந்தைகளை உயிரைக்கொடுத்து காப்பாற்றிய அந்த இளம் பெண்ணை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! அது தான் வீரம்... அது தான் பாராட்டப்படவேண்டிய மனித பண்பு...

தஞ்சை பெண்களின் வீரம் பற்றி குந்தவை நாச்சியார் சொல்வார்... இங்கே இயல்பாகவே துணிச்சல் எங்களுக்கு வருகிறது என்று! உண்மை தான் போல!
சுகந்தியை பற்றி படிக்க படிக்க நெஞ்சு விம்முகிறது!
அவருக்கு 21 வயது தான் ஆகிறது.. பட்டதாரி... திருமணம் ஆகவில்லை! எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த பள்ளிக்கு அந்த வேனிலேயே சென்று வருகிறார்.... குறைந்த சம்பளம் தான்!
அவருடன் குளத்தில் இறந்த குழந்தைகள் பெரும்பாலும் அவரது கிராமத்தை சார்ந்தவர்கள் தான்..... பதினோராவது குழந்தையை காப்பாற்றும்போது அந்த குழந்தை அவரது கை நழுவி குளத்துக்குள் ஆழத்தில் சென்றுவிட்டதாம்.... இவர் நீச்சல் தெரியாத நிலையிலும் உள்ளே குனிந்து அந்த குழந்தையை வெளியே எடுத்து இருக்கிறார்..... அதற்குள் இவர் மூச்சு திணறி.... எல்லாம் முடிந்து விட்டது.... ஆனால் அந்த குழந்தையை காப்பாற்றி விட்டார்!
எல்லோருக்கும் செல்ல பெண்ணாக அந்த கிராமத்தில் வளம் வந்த சுகந்தி இப்போது இல்லை! எனினும் தன்னால் ஆன செயலை எல்லாம் இறுதி வரை செய்து விட்டு தான் மறைந்து இருக்கிறார்!
இதை பற்றி ஏடுகளில் வந்த செய்திகள் சில...
’கட்டளைவெளி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை வசந்தி ,பள்ளியில் சேர்ந்து ஒன்றரை வருடங்கள்தான் ஆகிறது.தினமும் அந்த வேனிலேயே செல்லும் அவர் அந்தக் குழந்தைகள் மீது கொள்ளைப் பிரியம் கொண்டவராம்.வேன் குளத்தில் விழுந்ததுமே நீந்தி வெளியே வர முயன்றிருக்கிறார்.குழந்தைகள் தண்ணீருக்குள் சிக்கியிருப்பதைப் பார்த்துப் பதறி..அடுத்த கணமே உள்ளே மூழ்கியவர் , நான்கு குழந்தைகள் வரை வெளியே கொண்டுவந்து காப்பாற்றி விட்டார்.ஐந்தாவது தடவை உள்ளே போனவர் ...இரண்டு குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வெளியே வருவதற்குள் மூச்சு முட்டி உயிரை விட்டுவிட்டார்.உடலைக் கரையேற்றும்போதும் அந்த இரு குழந்தைகளையும் கையில் இறுகப் பிடித்தவாறே சுகந்தி டீச்சர் இருந்த காட்சியைப் பார்த்துக் கிராமமே விம்மியது’’- ஜு.வி.09.12.09
’மகராசி!சுகந்தி ஆசிரியை மட்டும் குப்புறக் கவிழ்ந்த வேனுக்குள்ள இல்லன்னா இன்னைக்கு எங்க எல்லாப் புள்ளைகளையும் இழந்துட்டு நாங்க அனாதையாயிருப்போம்.பாவம் அந்தப் பொண்ணு உசிரக் கொடுத்து எங்க புள்ளகளக் காப்பாத்தியிருக்கு’என,குழந்தைகள் பலரையும் உயிரோடு மீட்ட ஆசிரியை சுகந்தியைப் பற்றிப் பெற்றோர் பலரும் கண்ணீர் ததும்பப் பேசுகின்றனர்.’’-குமுதம்,16.12.09
மற்றவர்களை உயிரோடு எரிப்பவர்களை தீரர்கள் என்றும் அஞ்சாநெஞ்சன் என்றும் பேசும் தமிழகம், இந்த சின்ன பெண்ணின் வீரத்தை, தன்னலமற்ற தியாகத்தை அங்கீகரிக்கவா போகிறது????