Saturday, October 10, 2009

தகவல் அறியும் உரிமை சட்டம்

கோரிக்கை பெற்ற 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு தகவல் அளிக்க வேண்டும் அல்லது விண்ணப்பதாரரின் கோரிக்கையை ஏற்க மறுக்குமிடத்து, தகவல் பெறும் உரிமை சட்டம் 2005, பிரிவுகள் 8 மற்றும் 9ல் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பொருத்தமான காரணத்தைச் சுட்டிக்காட்டி நிராகரிக்க வேண்டும்.

கோரப்பட்ட தகவலானது, ஒருவருடைய உயிர் அல்லது சுதந்திரம் தொடர்புடையதாகயிருப்பின், அதற்கான கோரிக்கை பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள், தகவல் அளிக்கப்படுதல் வேண்டும்.

குறிப்பிட்ட கால கெடுவிற்குள் கோரப்பட்ட தகவலின் பேரில் முடிவு எதனையும் அளிக்க தவறுமிடத்து, சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர், அக்கோரிக்கையினை ஏற்க மறுத்ததாகவே கருதப்படும்.

கோரிக்கையின் மீது தகவல் அளித்தல் குறித்து முடிவு எடுக்குமிடத்து, பொதுத்தகவல் அலுவலர் அந்த தகவல் அளிப்பதற்கான கூடுதலான கட்டணம் ஏதேனுமிருப்பின், அதைச் செலுத்தக் கோரி விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவரத்தினை அனுப்புவதற்கும், கூடுதலான கட்டணத்தை செலுத்துவதற்கும் இடையே உள்ள காலத்தினை ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட 30 நாட்கள் கால அளவையில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

மேல் முறையீட்டு அலுவலர், மேல் முறையீட்டிற்கான காலக்கெடு, அதனை செயல்படுத்தவேண்டிய முறை மற்றும் விதிக்கப்பட்ட கட்டணங்கள் உள்ளடங்கிய விவரங்களை, முடிவின் மீதான மறு ஆய்விற்காக, மனுதாரருக்கு அளித்தல் வேண்டும்.

தகவல்கள் அச்சடிக்கப்பட்ட படிவத்தில் அல்லது மின்னணு படிவத்தில் இருக்குமிடத்து, அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விண்ணப்பதாரர் செலுத்துதல் வேண்டும். மேற்கூறிய கட்டணங்கள் அனைத்தும், நியாயமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மனுதாரர் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள நபராக இருக்குமிடத்து, மேற்கூறிய அனைத்து கட்டணங்களையும் அவரிடமிருந்து வசூலிக்கக் கூடாது.

பொது தகவல் அலுவலர், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் தகவலை அளிக்க தவறுமிடத்து, தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 7 உட்பிரிவு 5ன்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணமின்றி, விண்ணப்பதாரருக்கு அந்த தகவலை அளிக்க வேண்டும்.

மனுதாரரின் விண்ணப்பத்தினை நிராகரிக்குமிடத்து, விண்ணப்பதாரருக்கு பொதுத் தகவல் அலுவலர் கீழ்க்கண்ட தகவல்களையும் தெரிவித்தல் வேண்டும் 1. விண்ணப்பத்தினை மறுப்பதற்கான காரணங்கள்;
2. அவ்வாறு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு எந்த கால கெடுவுக்குள் செய்யப்பட வேண்டும்;
3. மேல் முறையீட்டு அலுவலர் குறித்த விவரங்கள்.அரசின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் தகவல்கள் மற்றும் வள ஆதாரங்களை திசை திருப்பக்கூடிய தகவல்களைத் தவிர, ஏனைய தகவல்களை, அதற்குரிய சாதாரண படிவத்திலேயே வழங்கலாம்.

என்ன எல்லாம் படித்து புரிந்து விட்டதா ?
இனி களத்தில் இறங்கி விட வேண்டியது தானே ?
நான் இறங்கி விட்டேன் !!! எனது முதல் மனுவை தந்து விட்டேன்.
அதை பற்றிய தகவல்கள் அடுத்த பதிவில்...

1 comment:

Unknown said...

Tagaval ariyum urimay sattam patriya un vilakam arumai, enda sattam patirya thakavalai kooda ariya vendum yenra ennam ennum nam makkalidaye varavillai endru tan sollavendum.

Adanal tan adai ennum sarivara yaarum ubayogika villa yendru yenna thondrugiradu.

Appadi ubayogithirundal adigarigaluku konjam bayam erundurukum. Un Vetriku vazhthukulal.