Wednesday, August 26, 2009

சுவிஸ் வங்கி

கந்தசாமி படத்தின் உட்கரு 'கருப்பு பணம்' பற்றிய கட்டுரை.

இந்தியாவில் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டதும், வரி ஏய்ப்பு செய்யப்பட்டு பதுக்கப்பட்டதுமான இந்திய கறுப்புப்பணம் உலக வங்கிகளில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 64 லட்சம் கோடி. இதயமே நின்றுவிடும்போல் இருக்கிறதா? மேலே படியுங்கள்.

உலகிலேயே கறுப்புப் பணத்திற்குப் பாதுகாப்பான இடம் `சுவிஸ் பேங்க்' என்றழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள்தான். அந்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் இந்த வங்கிகளின் சேவைகளைப் பொறுத்தே அமைந்துள்ளது. சுவிஸ்ஸில் உள்ள வங்கிகள் சுவிஸ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வராது. எனவே, அந்த அரசே நினைத்தாலும் வங்கிக் கணக்குப் பற்றிய எந்த விவரத்தையும் அறிந்து கொள்ள முடியாது. இதுதான் உலகில் உள்ள கறுப்புப் பண முதலைகள் அனைவரும் சுவிஸ் வங்கிகளில் தங்களின் பணத்தைப் பதுக்கி வைப்பதற்கான முக்கிய காரணம். இந்த ரகசிய காப்பு விவகாரங்களை 1934 ஆம் ஆண்டு முதலே ஒரு சட்டமாக்கி பாதுகாத்து வருகிறது சுவிஸ் அரசு.

மேலும், அந்த நாட்டின் சட்டப்படி அதிகப்படியான வருமானத்தை கணக்கில் காட்டாமலிருப்பதோ, சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை மறைப்பதோ ஒரு குற்றமே இல்லை. எனவேதான் உலக நாடுகளில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணம், வரிஏய்ப்பு செய்யப்பட்ட பணம் என எல்லாவிதமான கறுப்புப் பணமும் சுவிஸ் வங்கிகளில் குவிந்து வருகின்றது.

உலகிலேயே கறுப்புப் பண பதுக்கலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தியர்கள்தான். இந்தியர்களின் கறுப்புப் பணமான 64 லட்சம் கோடி ரூபாய் என்பது ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தில் 48 சதவிகிதம் என்கின்றார் இந்திய பொருளாதார நிபுணர் அருண்குமார்.

இந்த 64 லட்சம் கோடி ரூபாய் என்பது உலக நாடுகளில் இந்தியா வாங்கியுள்ள கடன் தொகையைப் போல பதின்மூன்று மடங்கு அதிகம். அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த கடனே நாலரை லட்சம் கோடிக்கும் குறைவுதான். நாம் நமது பணத்தை கறுப்புப் பணமாக வங்கிகளில் பதுக்கி வைத்துவிட்டு, உலக நாடுகளிடம் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பணம் இந்திய அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள், ஸ்டாக் புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், சினிமா நடிகர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கிரிமினல்களுக்குச் சொந்தமானதாக கூறப்படுகிறது.

உலக அளவில் இது போன்ற கறுப்புப் பணம் பெரும்பாலும் சர்வதேச தீவிரவாதம், போதைப் பொருள் தயாரித்தல், கடத்தல், விற்பனை, சர்வதேச அளவில் விபசாரம், புளூபிலிம் தயாரிப்பு, விநியோகம் மற்றும் கடத்தல், சூதாட்டம் ஆகியவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக உலக நாடுகள் கருதுகின்றன. அதிலும் கறுப்புப்பணமே சர்வதேச தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தப்படுவதாக உலகநாடுகள் பலவும் அஞ்சுகின்றன.

இந்தியா உண்மையிலேயே வளமான நாடு தான்...
இத்தனை பேர் சுரண்டியும், எத்தனை மக்களை வாழ வைத்து கொண்டிருக்கிறது.

No comments: