Thursday, August 27, 2009

வந்துவிட்டது சமச்சீர் கல்வி

அடுத்த கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறை அமலாகிறது : முதல்வர் அறிவிப்பு

சமச்சீர் கல்வி திட்டம் குறித்து சமீப காலமாக பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும், தனியார் அமைப்புகளும் பரபரப்பாக பேசி வருகின்றன. ஸ்டேட் போர்டு, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி., என்று பத்தாம் வகுப்பு வரை நான்கு விதமாக உள்ள கல்வி முறையை ஒரே முறையாக, ஒரே பாடத் திட்டமாக, ஒரே தரத்துடன் கொண்டு வருவது தான் சமச்சீர் கல்வி திட்டம்.

பணமில்லாத ஏழைகளுக்கு மாநிலக் கல்வியும், வாய்ப்பும் வசதியும் உள்ள குழந்தைகளுக்கு மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட மூன்று கல்வித் திட்டங்களும் என்பதுபோன்ற நிலைமை ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது. இப்படியொரு நிலைமை ஏற்படக் காரணமே, அடிப்படைக் கல்வியில் தனியார் துறை நுழைவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததுதான். மாநில அரசின் மானியம் பெறும் அனைத்துப் பள்ளிகளும், அரசால் நடத்தப்படும் பள்ளிகளும் ஒரே பாடத்திட்டத்தைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் எப்பவோ வரவேண்டிய அறிவிப்பு, இப்பவாவது வந்திருக்கிறதே என்ற நிம்மதியுடன் வரவேற்கிறேன் முதல்வரின் செயலை.

எங்கே போனது மனிதம்

"தம்மிடம் சிக்கிய ஒன்பது தமிழர்களை சித்திரவதை செய்து ஈவிரக்கமில்லாமல் இலங்கை ராணுவ வீரர்கள் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஜனவரியில் நடந்துள்ளது. விடியோவில் பதிவான இந்த கொடூர சம்பவத்தை பிரிட்டனைச் சேர்ந்த "சானல் 4' தொலைக்காட்சி புதன்கிழமை ஒளிபரப்பு செய்துள்ளது.

அந்த ஒன்பது பேரும் சித்திரவதை செய்து கொல்லப்படுவதை ஒரு ராணுவ வீரரே தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். அந்த விடியோ, ஜனநாயக ஆதரவு பத்திரிகையாளர்கள் அமைப்பு மூலம் சானல் 4 தொலைக் காட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விடியோ காட்சி நிஜமானதல்ல என்றும் இத்தகைய ஈவிரக்கமற்ற கொடிய செயலில் தமது ராணுவம் ஈடுபடவில்லை என்றும் இலங்கை மறுத்துள்ளது."


நெஞ்சை உருக்கும் செயல். இத்தகைய கொடுமைகளை உலகம் கண்டிக்காமல் இருப்பது, உலகம் தர்மசக்கரத்தின் அடிப்படையில் சுழலுவதில்லை என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.

சில காலங்களுக்கு முன்பாக அல்-குவைதா, ஈராக்கில் செயல்படும் தீவிரவாத குழுக்கள் பிணையாளிகளைக் கொலை செய்யும் வீடியோக்கள் வெளியிட்ட பொழுது துடித்த உலகம், இறையாணமை உள்ள ஒரு நாடு என்று சொல்லிக்கொள்ளும் இலங்கை நாட்டின் இராணுவம் செய்யும் பொழுது கண்டும் காணாமலும் இருக்கிறது. இப்படி மனித அத்துமீறல் செய்யும் ஒரு நாட்டிற்கு இந்தியா உதவுவதை எண்ணும் பொழுது இந்தியாவையும் மிருக வெறிபிடித்த தீவிரவாத நாடு என்று சொல்வதில் தவறில்லை. வரலாறும் அதையே சொல்லும்.

செத்துப்போவன் தமிழன் என்பதற்காக மட்டும் அல்ல அவன் மணிப்புரியோ அல்லது பாகிஸ்தானியாகவோ இருந்தால் கூட அவனுக்கு ஆதரவாக இருப்பதே மனித குலத்தை நாகரிகப் பாதைக்கு இட்டுச் செல்லும். இத்தைகய செயல்களை ஆதரிக்கும் இந்தியாவும் அதனை ஆதரிக்கும் இந்தியர்களும் காட்டுமிராண்டி காலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பவர்கள். இத்தகைய கொடும்பாதாக செயல்களை செய்த ஒரு நாட்டுக்கு ஆதரவாக நான் வாழும் நாடு ஐநாவில் வாக்களித்திருக்கிறது.

ஒட்டுத்துணியின்றி ....உயிரை சுட்டு எடுக்கும் இந்த கேவலத்தை பார்த்துகொண்டு இருப்பதுதான் இந்த இந்தியாவின் இறையாண்மை என்றால் .... அந்த இறையாண்மை எனது தலை மயிருக்கு சமம்

பி.கு : அந்த வீடியோ காட்சி மற்றும் படங்களை இங்கு தவிர்த்திருக்கிறேன்.

Wednesday, August 26, 2009

சுவீஸ் வங்கி கணக்கு

சுவீஸ் வங்கியில் கணக்குத் துவங்குவது எப்படி?

சுவிஸ்வங்கியில் கணக்குத் துவங்க ஐந்தாயிரம் சுவிஸ் பிராஸஸ் பணம் கட்டி யார் வேண்டுமானாலும் சாதாரண கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்கில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைக்க முடியாது. இதற்கு பிரைவேட் அக்கவுண்ட் எனப்படும் ஸ்பெஷல் அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும். இந்த பிரைவேட் அக்கவுண்ட் ஓபன் செய்ய முதல் டெபாசிட்டே இந்திய மதிப்பில் ஒன்றரைக் கோடி ரூபாயைக் கட்ட வேண்டும்.

இதற்கு நாம் சுவிஸ் நாட்டுக்குப் போக வேண்டுமென்பதில்லை. இமெயிலில் நமது விவரங்களை அனுப்பினாலே, அந்த வங்கியின் பிரைவேட் பேங்கர்ஸிலிருந்து ஒரு நபர் நீங்கள் குறிப்பிடும் இடத்திற்கே வந்து, அது சென்னையாக இருந்தாலும் வந்து உங்களின் பிரைவேட் அக்கவுண்டை தொடங்கி வைப்பார். பிரைவேட் அக்கவுண்ட் தொடங்கப்பட்டதும் ஒரு அக்கவுண்ட் நம்பர் கொடுக்கப்படும். அதன்பிறகு எல்லாமே அந்த நம்பர்தான். அதுமட்டுமின்றி, இந்த பிரைவேட் வங்கியின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவெனில், வங்கிக் கணக்கைத் தொடங்கியவர் யாரை நாமினியாக குறிப்பிடுகிறாரோ அவரைத் தவிர வேறு யாரும் மனைவி, பிள்ளைகளாக இருந்தாலும் இந்தப் பணத்தை உரிமை கோர முடியாது.

இப்படி பிரைவேட் அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர் சுவிட்சர்லாந்து நாட்டின் தண்டனைச் சட்டப்படி அந்த நாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால்தான், அந்நாட்டு அரசே அந்த நபரின் பிரைவேட் அக்கவுண்ட் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இப்படி பல்வேறு இறுக்கமான சிக்கல்கள் இருப்பதால்தான், இந்தியர்களின் இன்வெஸ்ட்மெண்ட் சுவிஸ் வங்கிகளில் குவிந்து கொண்டிருக்கிறது.

சுவிஸ் வங்கி

கந்தசாமி படத்தின் உட்கரு 'கருப்பு பணம்' பற்றிய கட்டுரை.

இந்தியாவில் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டதும், வரி ஏய்ப்பு செய்யப்பட்டு பதுக்கப்பட்டதுமான இந்திய கறுப்புப்பணம் உலக வங்கிகளில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 64 லட்சம் கோடி. இதயமே நின்றுவிடும்போல் இருக்கிறதா? மேலே படியுங்கள்.

உலகிலேயே கறுப்புப் பணத்திற்குப் பாதுகாப்பான இடம் `சுவிஸ் பேங்க்' என்றழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள்தான். அந்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் இந்த வங்கிகளின் சேவைகளைப் பொறுத்தே அமைந்துள்ளது. சுவிஸ்ஸில் உள்ள வங்கிகள் சுவிஸ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வராது. எனவே, அந்த அரசே நினைத்தாலும் வங்கிக் கணக்குப் பற்றிய எந்த விவரத்தையும் அறிந்து கொள்ள முடியாது. இதுதான் உலகில் உள்ள கறுப்புப் பண முதலைகள் அனைவரும் சுவிஸ் வங்கிகளில் தங்களின் பணத்தைப் பதுக்கி வைப்பதற்கான முக்கிய காரணம். இந்த ரகசிய காப்பு விவகாரங்களை 1934 ஆம் ஆண்டு முதலே ஒரு சட்டமாக்கி பாதுகாத்து வருகிறது சுவிஸ் அரசு.

மேலும், அந்த நாட்டின் சட்டப்படி அதிகப்படியான வருமானத்தை கணக்கில் காட்டாமலிருப்பதோ, சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை மறைப்பதோ ஒரு குற்றமே இல்லை. எனவேதான் உலக நாடுகளில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணம், வரிஏய்ப்பு செய்யப்பட்ட பணம் என எல்லாவிதமான கறுப்புப் பணமும் சுவிஸ் வங்கிகளில் குவிந்து வருகின்றது.

உலகிலேயே கறுப்புப் பண பதுக்கலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தியர்கள்தான். இந்தியர்களின் கறுப்புப் பணமான 64 லட்சம் கோடி ரூபாய் என்பது ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தில் 48 சதவிகிதம் என்கின்றார் இந்திய பொருளாதார நிபுணர் அருண்குமார்.

இந்த 64 லட்சம் கோடி ரூபாய் என்பது உலக நாடுகளில் இந்தியா வாங்கியுள்ள கடன் தொகையைப் போல பதின்மூன்று மடங்கு அதிகம். அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த கடனே நாலரை லட்சம் கோடிக்கும் குறைவுதான். நாம் நமது பணத்தை கறுப்புப் பணமாக வங்கிகளில் பதுக்கி வைத்துவிட்டு, உலக நாடுகளிடம் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பணம் இந்திய அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள், ஸ்டாக் புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், சினிமா நடிகர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கிரிமினல்களுக்குச் சொந்தமானதாக கூறப்படுகிறது.

உலக அளவில் இது போன்ற கறுப்புப் பணம் பெரும்பாலும் சர்வதேச தீவிரவாதம், போதைப் பொருள் தயாரித்தல், கடத்தல், விற்பனை, சர்வதேச அளவில் விபசாரம், புளூபிலிம் தயாரிப்பு, விநியோகம் மற்றும் கடத்தல், சூதாட்டம் ஆகியவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக உலக நாடுகள் கருதுகின்றன. அதிலும் கறுப்புப்பணமே சர்வதேச தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தப்படுவதாக உலகநாடுகள் பலவும் அஞ்சுகின்றன.

இந்தியா உண்மையிலேயே வளமான நாடு தான்...
இத்தனை பேர் சுரண்டியும், எத்தனை மக்களை வாழ வைத்து கொண்டிருக்கிறது.

Saturday, August 22, 2009

கந்தசாமி


சுமார் இரண்டு வருட காலத்திற்கு பிறகு விக்ரம் படம்.ஒரே வரியில் சொன்னால் 'அந்நியன்' + 'சிவாஜி' = 'கந்தசாமி' அவ்வளவே. இரண்டு வருட உழைப்பு விக்ரமிடம் நன்றாக தெரிகிறது. தன் வேலையை செவ்வனே செய்திருக்கிறார். நாயகி ஸ்ரேயா கிராப்பு மண்டையுடனும், கிழிந்த உடையுடனும் வந்து பாட்டு பாடுகிறார்,காதல் செய்கிறார் - விளைவு கடுப்பு தான் மிஞ்சுகிறது. இது போல கதாபாத்திரங்களுக்கு ஒரு ரகசியாவோ,முமைத் கானோ போதுமே எதற்கு ஸ்ரேயா ? வடிவேலு மிகசரியான வேகத்தடை. சலிப்பே ஏற்படுகிறது.

ஷங்கர் போல MESSAGE படங்களை தர வேண்டும் என நினைத்து அவரது பிரமாண்டத்தை மட்டுமே தந்திருக்கிறார் இயக்குனர் சுசி கணேசன். அந்த huge list இல் சேர இன்னும் homework தேவை.ஒரு சில பாடல்கள் மொக்கையை போட BGM பட்டையை கிளப்புகிறது. Foreign Exchange,Share Market,Tax Fraud,Black Market போன்றவையான Economic Offence எனப்படும் சிவாஜியில் பார்த்த அதே BLACK MONEY கான்செப்ட் தான். யோசிக்க வைக்கும் மற்றுமொரு படம். கருத்து சொல்ல வேண்டும் என்பதெல்லாம் சரி தான், ஆனால் அதை மிகசரியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். காமெடி,கவர்ச்சி,தேவை இல்லாத பிரம்மாண்டம் போன்ற இடை சொருகல்கள் படத்தின் மிகப் பெரிய தொய்வு.

மரத்தில் சீட்டு எழுதி கட்டுபவர்களின் கோரிக்கையை தீர்த்து வைக்கிறார் விக்ரம். தாகம் என்றால் மரக்கன்றை தான் தர வேண்டுமே ஒழிய மினரல் water bottle தர கூடாது. பணம் மட்டுமே அனைத்து பிரச்சனைக்கும் தீர்வாகாது.


வடிவேலுவின் காமெடி,ஸ்ரேயாவின் காதல்,பல நீளமான காட்சிகள்,சில தேவையற்ற காட்சிகள் என அத்தனையும் நீக்கி இருந்தால் படத்தின் நீளமும் குறைந்திருக்கும் , வேகமும் கூடியிருக்கும். ( படத்தின் நீளம் 3:15 மணி நேரம்). ஆற்றில் போட்டாலும் அளந்து போடவேண்டும், யோசிங்கள் தானு. அடுத்த படமும் தெலுங்கு மகதீரா rights வாங்கி இருக்கிறார் போல. என்னவென்று சொல்ல... கதை தேர்வு மிக முக்கியம். மொத்தத்தில் புரியாத பல காட்சிகள் இருந்தாலும், ஒரு தடவை மட்டுமே பார்க்கலாம் போன்ற படம்.

எனது மதிப்பீடு : 5/10

Tuesday, August 18, 2009

சுதந்திர தின கவிதை

நான் ரசித்த "இவண் தமிழன்" கவிதை உங்கள் கவனத்திற்கு ,


பருந்திற்கு தன் குஞ்சு இன்று இரையாகப் போகிறது

என்பதை அறியாமல் தன் குஞ்சிற்கு

இரைதேடி செல்கிறது தாய்க்குருவி !

"தாய்க்குருவி என் தாய்நாடு,

தீவிரவாதம், மதக்கலவரம், பட்டினிச்சாவு,

ஊழர்போர், பயங்கரவாதம் - அவள்

கொண்டாடும் பிள்ளைகளை

கொண்டாடும் பிணிகள் !"

அர்த்தநாரீஸ்வரரின் ஆளுகைதான் இங்கு

எங்கும் தலைவிரித்து ஆடுகிறதோ என்று

எண்ண தோன்றுகிறது.

"மேல் தட்டு மன்னர் - அடித்தட்டு மக்கள்

விண்வெளி வெள்ளோட்டம் - வயல்வெளி வெள்ள ஓட்டம்

வெள்ளம் - வறட்சி"

இன்னும் பட்டியல் ஏராளம்,

2020-ல் இந்தியா ?

இந்திய தேசம் வல்லரசு ஆகிவிடலாம்,

ஆனால் என் இனத் தமிழன் அன்றும் ஏர்பூட்டி

வயர்க்காட்டிற்குத்தான் நடந்து கொண்டிருப்பான் .

"அவன் அடுத்த வேலை சோற்றுக்கு !"

"அவன் கண்டவையோ ஏராளம்,

வறட்சியில் பட்டினிச்சாவு,

வெள்ளத்தில் பொட்டலச்சோறு,

அழுகிய பயிர்கள்,உணவிற்கு எலிக்கறி,

இன்னும் எத்தனையோ !

" எல்லாவற்றையும் தாண்டி,

அவன் தன் வாழ்க்கையை தொடங்கிய தொலைவிலேதான்

இன்றும் இருக்கிறான், முன்னேற்றம் இன்றி !

"தமிழகத்தின் மீது சோக ரேகைகள்

இன்றும் படர்ந்து கொண்டுதான்

இருக்கின்றன - வறண்ட நதிகளாய் ! "

இந்தியா முன்னேறுகிறது ?

ஆம் இந்தியா முன்னேறுகிறது.

"மென்பொருள் தயாரிக்கும் இந்தியனுக்கோ

மாதத்திற்கு பல லகரங்கள்,

உணவுப்பொருள் உற்பத்தியாக்கும்

இந்தியனுக்கு ?

வருடந்தோறும் அரசாங்கம் தரும்

இழப்பீட்டு தொகைதான் - அவன்

வருட வருமானமோ ? ....."

"உழவனின் அரிசி எண்ண

அற்பமாகிவிட்டதா ?

மறந்துவிட்டாயா மனிதனே,

உன் இறப்பிலும் கூடவருவது

வாய்க்கரிசிதான் ! "



தோழனே, நம் நாடு 2020-ல் வல்லரசாகிவிடும்,

அதில் ஐயமில்லை - அன்று

நம் உழவுத்தோழனை

சிற்றரசனாக்க வேண்டாம்,

ஒரு சராசரி மனிதனாகவாவது

அவன் களிப்பாக வாழட்டுமே ?

"வாள் முனையினும் வலியது பேனாமுனை.

அதனினும் வலியது - என் இனத் தமிழனின் ஏர்முனை!"

சிந்திப்போம் ! உயர்த்துவோம் !


நன்றி -
இவண் தமிழன்.

Monday, August 17, 2009

கேட்டு நடங்கள் பிரதமரே...

உலகம் அறிந்த பொருளாதார அறிஞர்களில் ஒருவராகப் பிரதமர் மன்மோகன் சிங் இருந்த போதிலும் அவருக்கு ஆலோசனைகள் கூறி உதவ ஒரு குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி. ரங்கராஜன் பொறுப்பேற்றிருப்பது வரவேற்கத் தக்கது.


பதவி ஏற்ற பிறகு ரங்கராஜன் சுட்டிக்காட்டியிருக்கும் சில முக்கியமான பிரச்னைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கைகளை உடனே துவக்கினால் நல்லது.

""வேளாண்துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால் நம் நாட்டுப் பொருளாதாரமே பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. குறிப்பாகப் பாசன மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும்
கிராம மக்களுக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்க, வேலைவாய்ப்புத் தரும் பணிகளை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும்.

விலைவாசி உயர்வு மக்களைப் பாதிக்காமல் இருக்க குறுகிய கால மற்றும் நடுத்தர கால நடவடிக்கைகள் அவசியம். நம்மால் உடனே சாகுபடி செய்ய முடியாத பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றை இறக்குமதி செய்து நேரடியாக விநியோகிக்க வேண்டும். அடுத்த பருவத்துக்குப் போதிய அளவில் பருப்பு, எண்ணெய்வித்து சாகுபடிக்கு உற்ற உதவிகளைச் செய்ய வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக சீராக இருந்த நம்முடைய ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிவீதம், கடந்த ஆண்டு சர்வதேச அரங்கில் ஏற்பட்ட பொருளாதார
மந்தநிலை காரணமாகச் சரிந்துவிட்டது.

கடந்த
ஆண்டு 6.7% ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி வீதம் இந்த ஆண்டு 6% முதல் 6.5% அளவுக்குள் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
வறட்சி, விளைச்சல் குறைவு என்று சந்தையில் பேச்சு வந்தாலே விலைவாசி உயர ஆரம்பித்துவிடும். வாங்கும் சக்தி குறைவாக உள்ள மக்கள் நிறைந்த நம் நாட்டில் விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறினால் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும். கோடிக்கணக்கான மக்கள் பழையபடி வறுமைக் கோட்டுக்கும் கீழே
போய்விடுவார்கள்.

பொது விநியோக முறையைச் சீரமைக்க மத்திய, மாநில அரசுகள் உண்மையிலேயே தீவிரமான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். ஏழைகளுக்கு மட்டும் அல்ல, மத்திய தர குடும்பங்களுக்கும் அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பண்டங்கள் மானிய விலையில் இல்லாவிடினும் கட்டுபடியாகும் விலையில் தட்டுப்பாடு இல்லாமல் நல்ல தரத்தில் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தியிருக்கிறார் ரங்கராஜன்.


அவரது அறிவுரைகளை ஆட்சியாளர்கள் பின்பற்றி நடக்க வேண்டும். மத்திய அரசும் மாநில அரசுகளும் தங்களுடைய வருவாய்க்கு மிஞ்சி செலவு செய்வதையும் அப்படிச் செய்வது குறித்து கவலைப்படாமல் இருப்பதையும் உணர்ந்து அதைக் கட்டுக்குள் கொண்டுவரத்தான் ""நிதிப் பொறுப்பு மசோதா'' கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த மசோதா கூறியபடி எந்த மாநிலமாவது, மத்திய அரசாவது நடக்கிறதா என்று பார்த்தால் இல்லை.

"விடுங்க பாஸ்... இவுங்க எப்போதுமே இப்படி தான்.
குழு அமைப்பதும், தீர்ப்பு வழங்குவதும் சகஜம் தானே... " என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.

ஆனால் இப்படி ஒரு குழு இருப்பதும், இப்படி ஒரு ஆலோசனை தந்ததும் எத்தனை பேருக்கு தெரியும் என்ற ஐயத்தால், இதனை பெரும்பாலோர்க்கு தெரிவிக்கும் பொருட்டு இப்பதிவு.

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வீழ்ச்சி!

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் போதிய அளவு மழைப் பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வட இந்திய மாநிலங்களில் நிலத்தடி நீரைக் கட்டுப்பாடு இல்லாமல் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இம்மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறதென அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான "நாசா' தனது ஆய்வறிக்கையில்
எச்சரித்துள்ளது.

இந்நிலையில் தேசிய அளவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 177 மாவட்டங்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த மாவட்டமும் இடம்பெறவில்லை. ஆனால், தற்போது போதிய மழையில்லாததால் தமிழகமும் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கும் அபாயம் எழுந்துள்ளது.


மழை குறைவு... தென்மேற்கு பருவமழையின் மறைவுப் பிரதேசமாக தமிழகம் உள்ளது. இதனால், நடப்பு பருவத்தில் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை தமிழகத்தில் மழைப் பொழிவு இயல்பான அளவை விட குறைவாகவே இருந்தது.

பெரும்பாலான மாவட்டங்களில் கோடையைப் போல இன்னமும் வெயில் வாட்டுகிறது. இதனால் வறண்ட காலநிலை நிலவுகிறது.


கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், சிவகங்கை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் இயல்பான அளவை விட மிகக் குறைவாகவே மழை பெய்துள்ளது.

இவை தவிர, சென்னை, அரியலூர், நாமக்கல், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, வேலூர், விருதுநகர்
ஆகிய 13 மாவட்டங்களில் சராசரிக்கும் குறைவான அளவே மழை பெய்துள்ளது.

இதனால், இம் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில், வறட்சி தலைதூக்கியுள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் வீழ்ச்சி... மழைப் பொழிவு குறைந்ததால் ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், தருமபுரி, வேலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டமும் மிக வேகமாகக் குறைந்து வருகிறது.


கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வறட்சி நீடித்தால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறையும் அபாயம் உள்ளது. இதனால் கடல் நீர், நிலத்தடியில் புகுந்து உப்பு நீராகும்.


வடகிழக்கு பருவமழை வலுத்தால் மட்டுமே இந்த அபாயத்தைத் தவிர்க்க இயலும்.

ஆனால், குளிர்பானங்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், குடிநீர் பாட்டில்கள், கேன்கள் விநியோகிக்கும் வர்த்தக நிறுவனங்கள் பரவலாக நிலத்தடி நீரைக் கட்டுப்பாடு ஏதும் இல்லாமல் தனது இஷ்டம் போல பயன்படுத்தி வருகின்றன. எனவே இந்நிறுவனங்கள் நிலத்தடி நீரைச் சுரண்டுவதைத் தடுக்க விதிகளைப் கடைபிடிக்கிறதா என்பதைக் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டும்.

சென்னையில் குடிநீர், சமையல் தேவைக்காக மட்டும் நபருக்கு தினமும் 10 முதல் 20 லிட்டர் தண்ணீர் தான் செலவிடப்படுகிறது.

ஆனால் நீராடுதல், கழிப்பறைகளின் பயன்பாட்டுக்குத் தான், தினமும் நபருக்கு 60 முதல் 210 லிட்டர் தண்ணீர் செலவு செய்யப்படுகிறது.

என்ன செய்ய ... ?

நெஞ்சு பொறுக்குதில்லையே...

Monday, August 10, 2009

முதல்வரே தேவையா இது...?

எம்எல்ஏக்களுக்கு சென்னையில் இலவசமாக வீட்டுமனை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பலமுனைகளில் இருந்து எதிர்ப்புகளை உருவாக்கினாலும், இந்த சட்டப்பேரவையின் காலத்துக்குள் வீட்டுமனை வழங்குவதில் முதல்வர் உறுதியாக இருப்பதாகத் தகவல்.இதற்கிடையே, எம்எல்ஏக்களுக்கு மாதம் ரூ. 50,000 ஊதியம் என்ற உயர்வு அறிவிப்பு வேறு.

இந்த நேரத்தில்தான் காலப் பொருத்தத்துடன் சில தலைவர்களின் செயல்பாடுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது.காமராஜர் என்றொருவர் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தார்! அவர், தனது சொந்த ஊரான விருதுப்பட்டிக்கு (இப்போதைய விருதுநகர்) செல்லும்போது முன்னால் சுழல் விளக்குடன் சென்ற காவல் துறை வாகனத்தை நிறுத்தி "ஏன் சங்கு ஊதிக் கொண்டே செல்ல வேண்டும்?' எனக் கேட்டார்.

பின்னொரு முறை தனது வீட்டுக்குச் சென்ற அவர், அங்கே புதிய குடிநீர்க் குழாய் அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அதிகாரிகளை அழைத்து எனது வீட்டுக்குக் குடிநீர்க் குழாயை அமைக்கக் கேட்டது யார்? என ினவினார்."ஆயிரக்கணக்கானோர் குடிநீரின்றித் தவிக்கும்போது, முதல்வரின் வீடு என்பதால், வீட்டுக்குக் குடிநீர் இணைப்பை இத்தனை வேகத்தில் கொடுப்பீங்களான்னே?' எனக் கேட்டார்.காமராஜர் முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ஜீவானந்தம். எதிர்க்கட்சியானாலும், அவரது தொகுதிக்குள் ஒரு விழாவில் பங்கேற்க வந்த காமராஜர் "எங்கே ஜீவானந்தம்?' எனக் கேட்டார். அவரது குடிசை வீட்டுக்குச் சென்று "வாங்க ஜீவா, விழாவுக்குப் போகலாம்' என்றார் காமராஜர். "இல்லையில்லை, என்னால் வர முடியாது; எனது வேஷ்டியையும், சட்டையையும் துவைத்துக் காய வைத்துள்ளேன். காய்ந்தபிறகு அதை உடுத்திக் கொண்டுதான் வர முடியும்' என்றார் ஜீவானந்தம்.

இப்படி எளிமையாகவும், யதார்த்தமாகவும் வாழ்ந்த பல எம்எல்ஏக்களை, அமைச்சர்களை, முதல்வர்களை, தலைவர்களை இந்தத் தமிழ்ப் பூவுலகம் கண்டுள்ளது.காமராஜரைப் போல, கக்கனைப் போல, ஜீவாவைப் போல இருங்கள் என்று இப்போதுள்ள தலைவர்களை, மக்கள் பிரதிநிதிகளைக் கேட்டுக் கொண்டால் நாம் புத்திபேதலித்தவர்கள்.

அரசியல் சூழல் வெகுவாக - தலைகீழாக மாறியிருக்கிறது.ரூ. 50,000 ஊதியம் என்பதில்கூட, கார் பயணம், அலுவலகச் செலவுகள் எல்லாமும் சேர்த்துத்தான் என்று விளக்கமளிக்கிறார்கள். போகட்டும், மக்களுக்காக உழைக்க வந்தவர்கள். ஆனால், சிலவற்றை இந்த நேரத்தில் பதிவு செய்ய வேண்டும்.ரூ. 50,000 ஊதியம் வாங்கும் எம்எல்ஏக்கள் தவறு செய்யக் கூடாது. இன்னும் வேண்டுமானால், தேவையான ஊக்க- உதவித் தொகைகளை கூடுதலாகக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், எவரிடமும், எந்தக் காலமும்- அன்பளிப்பாகக் கூட எந்தப் பொருளையும், பணத்தையும், உதவியையும் பெற்றுக் கொள்ளாதவர்களாக எம்எல்ஏக்கள் மாற வேண்டும்.

அவ்வாறு பெறுபவர்களை கையும்களவுமாகப் பிடிக்கும் இன்னொரு காவல் துறைப் பிரிவையும் முதல்வர் உருவாக்க வேண்டும். எந்த அரசியல் தலையீடும் இல்லாத வகையில், அந்தப் பிரிவுக்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும்.

நேர்மையான மக்கள் பிரதிநிதிகளாக எம்எல்ஏக்கள் மாற வேண்டும் என்ற நோக்கத்தின் கீழ் ஊதிய உயர்வை அங்கீகரிக்கலாம். ஆனால், எல்லா வகையிலும்- எம்எல்ஏக்களுக்கு இலவச வீட்டுமனை என்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது.தொகுதியின், தொகுதி மக்களின் பிரதிநிதியான எம்எல்ஏ, சென்னையில் இடம் கிடைத்துச் சென்றுவிட்டால்? மக்களை விட்டு அவர் விலகி வெகுதொலைவு சென்றுவிடுகிறாரே? அப்புறம் இன்னொன்றையும் செய்யலாம், எம்எல்ஏக்களிடம் மனுக் கொடுக்க சென்னை செல்பவர்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை, தள்ளுபடி விலையில் ரயில் பயண அட்டைகள்...

அடுத்து, எம்எல்ஏக்கள் ஒன்றும் நிரந்தரமானவர்கள் அல்லர். ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே ராஜிநாமா செய்பவர்கள் அதிகரித்து வருவதும், இடைத் தேர்தலின்போது மீண்டும் அவர்களுக்கு போட்டியிட இடம் கிடைக்காததும் தற்போதைய அரசியலில் இயல்பான ஒன்றாகி வருகிறது.ஒவ்வொரு தேர்தலின்போதும் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது அனைத்துக் கட்சிகளிலும் இப்போது மாறியிருக்கும் வரவேற்கத்தக்க அரசியல் போக்கு.அப்படியானால், சில பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து கணிசமான எண்ணிக்கையிலான அரசியல்வாதிகளுக்கு "அதிகாரப்பூர்வமாகவே' சென்னையிலும் சில வீடுகள், தனி மாவட்டம்(!?), போலீஸôருக்கு இருப்பதைப் போல தனி ரேஷன் விநியோக முறை, தனியாக குறைதீர் ஆணையம்...பிறகு, தேர்தலின்போது மட்டும் உள்ளூரில், தொகுதிக்குள் முகாம்- தனி அலுவலகம், சொகுசான வீடு. இப்படியான அக- புற மாற்றங்கள் விளைவுகள் தமிழகத்தில் ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

மக்களின் வாழ்க்கைத் தரத்தில், வாழ்வியல் சூழலில் எந்த மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படாது. இன்னமும், இன்னமும் கீழே இறங்கிச் செல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம்.

ஐந்தாவது முறையாக ஆட்சி பொறுப்பில் இருக்கும் ஒரு முதல்வரால் இதை கூட சரியாக சிந்தித்து , தெளிவான முடிவு எடுக்க தெரிய வில்லை என்றால் பாவம் தமிழகம் தான்...

Thursday, August 6, 2009

என் ஊர்

நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.

ஒன்பத்துவேலி. தஞ்சை ஜில்லா,பாபநாசம் வட்டம், திருக்கருகாவூர் வழியே சென்றால் வரும் அழகிய கிராமம். நான் பிறந்து,வளர்ந்து, பள்ளிப்பருவம் வரை சுமார் 18 ஆண்டுகாலம் வாழ்ந்த ஊர். பின் கல்லூரி,வேலை என பல்வேறு காரணங்களினால் ஊரில் வசிக்க பாக்கியம் இன்று வரை இல்லை.

எங்கள் ஊரில் இருக்கும் ஒவ்வொரு பிடி மண்ணிலும் என் கால் பதிந்திருக்கும். நான் செல்லாத வீடே இல்லை, நாங்கள் விளையாடாத விளையாட்டே இல்லை.
கிரிக்கெட், கிட்டிப்புள், பலுங்கி, பம்பரம், கண்ணாமூச்சி, கபடி, ஏழு கல் மலை, பிள்ளையார் பந்து, volley ball, shuttle cock, கொக்கோ, கல்லா மண்ணா, கரண்ட், நொண்டி, நாடு, நிழல் மிதி, சீட்டுக்கட்டு, கேரம், நாலு தூண், தாயம், கொலகொலையா முந்திரிக்காய், பாட்டுக்கு பாட்டு என நினைவிற்கு தெரிந்தவை இவை. கிரிக்கெட்டிலேயே throw, bowling, one pitch, fultoss என விதவிதமாக ஆடுவோம். தெரு, திண்ணை, கொல்லை, ஆறு, கோவில், வயல் என ஆடாத இடமில்லை.

தினமும் மாலை விளையாடுவது போக சனி, ஞாயிறு நாட்களில் காலை முதல் இரவு வரை நீளும். கோடை விடுமுறை என்றால் தொலைந்தது ஊர். வெயில் அனைத்தும் எங்கள் தலையில் தான் விழும்.

காவிரியின் கிளை நதியான வெட்டாற்றின் கரையோரத்தில் இருப்பதால், எங்கள் ஊருக்கு beech ஆறு தான். எங்களை போல என் ஊர் மக்கள் பல பேருக்கு வயல் அக்கரையில் தான் உள்ளது. எனவே ஆறு வழியாக கடப்போரின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும். தண்ணீர் அதிகமாக வரும்பொழுது 2 கி.மீ. சுற்றி பாலம் வழியாக போக வேண்டும். கோடை காலத்தின் மாலை நேரங்களில் ஆறே ஜெகஜோதியாக இருக்கும். தினமும் இல்லை என்றாலும் வாரம் இரண்டு, மூன்று முறையாவது ஆற்றில் குளித்து கும்மாளம் போடுவோம். ஆடி பெருக்குக்கு வணங்குவது, மாடு,ஆடு,நாய் என இறந்த விலங்கினங்களை ஆற்றில் இழுத்து விடுவது,திருவிழா களம், கரையோரத்தில் சுடுகாடு கொட்டகை என ஊர் மக்களின் வாழ்க்கையுடன் ஒட்டி இணைந்து விட்டது எங்கள் ஊர் ஆறு.

உடம்பு சரி இல்லை என்றாலோ, விபத்து என்றாலோ வந்து குவியும் விசாரிப்புகள்,அறிவுரை , கேள்விகளுக்கு பதில் சொல்லி தாளாது. இன்று கூட நான் ஊர் சென்றால் 'வாங்க தம்பி எப்போ வந்தீங்க? என்ற கேள்விக்கு பதில் சொல்லியே வாய் வலித்து போகும். முக்கால் வாசி ஊரே சொந்த பந்தமாக இருக்கும். எந்த வீட்டில் எத்தனை பேர், யார் யார் என அத்தனையும் அனைவருக்கும் அத்துப்படி. (இன்றோ பெங்களூரில் என் பக்கத்தில் வீட்டில் இருப்பவரின் பெயரே தெரியாது,ஒரு வார்த்தை பேசியது கிடையாது. இத்தனைக்கும் அவரும் தமிழர்)

ஊரில் மொத்தம் ஐந்தாறு தெருக்கள் மட்டுமே இருந்தாலும் 'கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்' என்ற கூற்றின் ஏற்ப நான்கு கோவில். உதவி பெரும் துவக்க பள்ளி , அங்காடி, பால்வாடி, அஞ்சலகம் என சற்றே வளர்ந்த கிராமம். ஆனால் பேருந்து வசதி ஒன்றே ஒன்று தான், அதுவும் நான்கே நான்கு முறை ஒரு நாளிற்கு.அவ்வளவே.

கோடை விடுமுறைக்கு அனைவரது வீட்டிற்கும் விருந்தாளிகள் வருவர். ஊரே திருவிழா கூட்டம் போல் இருக்கும். (கோடை விடுமுறை பற்றி நிறைய இருப்பதால் அதை தனி பதிவில் பார்ப்போம்)

அப்புறம் பசங்க.எங்கள் செட்டில் பதினைந்து பேர் இருப்போம்.பண்டிகை நாட்களில் இருபதை தாண்டும். என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே நாள் முழுக்க பேசுவோம். வீட்டில் கேட்டால் சொல்ல தெரியாது. கிரிக்கெட் tournament போனால் முதல் சுற்றிலேயே வெளியேறி விடுவோம். ஆனால் ஒரு tournament விட மாட்டோம்.

நடை பயின்ற வீடு, சைக்கிள் கற்று தந்த சாலை, சோறூட்டிய சொந்தம் என அத்தனையும் அளித்த ஊர் எனக்கு உலகத்தையே அறிமுக படுத்தியது.இங்கே அருகில் நீங்கள் காணும் slideshow கூட அக்மார்க் ஒன்பத்துவேலி தான். நான் நேசிக்கும், நான் காதலிக்கும், நான் பெருமைப்படும் எனது ஊருக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

இப்ப புரியுதா முதல் வரியின் அர்த்தம்.

Monday, August 3, 2009

பண முதலைகளின் ஒரு வார நாடகம்

ஊரை அடித்து உலையில் போட்டுக் கொள்வது என்பதற்கு சரியான அர்த்தம் தேவையென்றால், இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனங்களைக் கேட்கலாம். மோசடிக்கு புது அகராதியையே உருவாக்கும் அளவுக்கு தேர்ந்தவை இவை.

பொத்தாம் பொதுவாக இந்தக் குற்றச்சாட்டை நான் முன் வைக்கவில்லை. அரசுக்கு எரிவாயு எடுத்துத் தரும் காண்டிராக்டராக உள்ளே நுழைந்து, இப்போது அந்த எரிவாயுவுக்கே சொந்தம் கொண்டாடும் அம்பானிகள் தொடங்கி, தங்கள் ஊதாரித்தனம், மோசமான நிர்வாகத்தால் நஷ்டப்பட்டு அதற்கும் அரசிடம் நஷ்டஈடு கேட்டும் தனியார் விமான நிறுவனங்கள் வரை ஏராளமான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

தனியார் தொழில்கள் என்பவை முழுக்க முழுக்க லாபநோக்கத்தில் இயங்குபவை. இதில் பொதுமக்கள் நலன் என்பது பூஜ்யமே. ‘அடடா… மக்கள் நன்றாக இருக்க வேண்டுமே என்ற நோக்கத்தில் எந்த முதலாளியும் இன்று தொழில் செய்யவில்லை. வேறு வழியே இல்லாமல், வாங்கியே தீர வேண்டிய கட்டாயத்தில் மக்களைத் தள்ளும் வேலையில்தான் தனியார் நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

எனவே இதில் வரும் லாபமும் நஷ்டமும் அவர்களையே நூறு சதவிகிதம் சாரும். அந்தத் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் வரும்போது மூடிக்கொண்டு போக வேண்டியதுதானே தவிர, மீண்டும் மக்கள் பணத்தை லம்பாகக் கொள்ளையடிக்க வாய்ப்புத் தேடக் கூடாது!

தனியார் விமான நிறுவனங்கள் சலுகைகக் கட்டணத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வதில்லை. மாறாக 100 சதவிகித இறுதிநிலை லாபம் (Marginal profit) வைத்தே இயக்குகிறார்கள். இந்த விமான நிறுவனங்களுக்கு அரசு அளித்த எரிபொருள் சலுகை உள்ளி்டட எதையும் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாகச் சேர அனுமதித்ததே இல்லை. எல்லா நேரத்திலும் லாபம் முழுமையாக தங்களுக்கு வேண்டும் என்பதே இவர்கள் குறிக்கோள். இப்போது நிலைமை சரியில்லை என்று புலம்புகிறார்கள். அதாவது லாபம் குறைந்துவிட்டது. அதை தாங்க முடியவில்லையாம். எனவே மக்கள் பணத்திலிருந்து தங்களுக்கு 52000 கோடி ரூபாக்குமேல் சலுகை மற்றும் உதவி நிதி வேண்டுமாம்.

இல்லாவிட்டால் ஸ்ட்ரைக் செய்வார்களாம்…
எப்படி இருக்கு இந்த நியாயம்?

தனியார் விமான நிறுவன விமானங்களில் பயணக்கட்டணம் அதிகம் என்பதற்காக அதைப் பாதியாகக் குறைக்குமாறு பயணிகள் போராட்டம் நடத்தினால் ஏற்பார்களா… அல்லது, சில மாதங்களுக்கு முன்பு வரை அரசு அளித்த மொத்த சலுகையையும் தாங்களே ஏகபோகமாய் அனுபவித்து கொள்ளையடித்தார்களே… அதை திருப்பித் தரச் சொன்னால் தருவார்களா…
அட… இன்று நஷ்டத்தில் அரசுக்கு பங்கு தர முன்வருபவர்கள், முன்பு சம்பாதித்த லாபத்தில் சரி பாதியை அரசுக்குத் தருவார்களா…
இன்றைக்கு நஷ்டம் என்றால், நேற்று வந்த லாபத்தில் அதைச் சரிக்கட்டிக் கொண்டு தொழிலைத் தொடர்வதுதானே வியாபார தர்மம்?

அப்படியும் நஷ்டத்தைத் தாங்க முடியாவில்லை என்றால் இழுத்து மூடிவிட்டுப் போக வேண்டியதுதானே… எதற்காக அந்தத் தொழிலைத் தொடர வேண்டும்?
பெரும்பணக்காரர்கள் தவிர, பிற மக்கள் ஏன் விமானங்களைப் புறக்கணிக்கத் துவங்கினார்கள் என்பதை இவர்கள் யோசிக்க வேண்டும்!

சற்றுமுன் கிடைத்த தகவல் :

தனியார் விமான நிறுவன வேலை நிறுத்தம் வாபஸ் :

வருகிற 18ந் தேதி தனியார் விமான சேவை நிறுவனங்கள் சார்பில் நடக்க இருந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த வேலை நிறுத்த அறிவிப்பை ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர்ஸ், ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட 8 பெரிய தனியார் நிறுவனங்கள் வெளியிட்டு இருந்தன.

இதற்கு கடும் தெரிவித்த மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி பிரபுல் படேல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டாம் என்றும், மீறி ஈடுபட்டால், மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரித்தார்.
மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், பயணிகளின் சிரமத்தை போக்குவதற்காக ஸ்டிரைக் நாளன்று கூடுதல் விமானங்களை இயக்கப்போவதாகவும் அறிவித்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இண்டிகோ விமான சேவை நிறுவனம் போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்தது. எனினும் மற்ற நிறுவனங்கள் ஸ்டிரைக்கில் கலந்துகொள்வதில் உறுதியாக இருந்தன.
இதனிடையே, நேற்று ஸ்பைஸ் ஜெட் மற்றும் எம்.டி.எல்.ஆர். ஆகிய தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்கள் போராட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்று முடிவு செய்தன. இதனால் போராட்டத்தில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு தனியார் விமான சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பு 18-ந் தேதி நடத்த இருந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தன.

Saturday, August 1, 2009

அமெரிக்கா என்றொரு ஓநாய்

இந்திய விவசாயிகளுக்கு ஏற்றுமதிக்கான சந்தையும், வாய்ப்பும் விரிந்து கிடக்கிறது. அதற்கான ஒத்துழைப்பையும், தொழில்நுட்பத்தையும் அமெரிக்கா வழங்கும்" என்று தன்னுடைய சமீபத்திய இந்திய பயணத்தின்போது வாய் திறந்திருக்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன்.

"ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதக் கதை' தான் நினைவுக்கு வருகிறது.

உலகளவில் உணவு உற்பத்தியாகும் நிலப்பரப்பில் இந்தியாவின் பங்கு வெறும் 3%. உலக மக்கள் தொகையில் 17%. அதேசமயம், ஜி&8 என்று அழைக்கப்படும் பணக்கார நாடுகளின் உணவு உற்பத்தி 65%. அந்த 8 நாடுகளின் மொத்த மக்கள் வெறும் 14%.

அப்படி இருக்கும்போது யார் யாருக்கு ஏற்றுமதி செய்வது...?

அமெரிக்காவின் மக்காச்சோளத்தை ஐரோப்பா நிராகரித்து விட்டது. அத்தனையும் மரபணு மாற்றப்பட்ட பி.டி. மக்காச்சோளம். வேறு வழியே இல்லாமல், அதையெல்லாம் உயிரி எரிபொருளுக்கு (Bio-fuel) தள்ள வேண்டியதாகி விட்டது. அபரிமிதமாக விளைந்து கிடக்கும் அந்த அமெரிக்கக் குப்பைக்கு ஒரு போக்கிடம்... அதாவது, சந்தை வேண்டும். அதற்கு இந்தியாதான் சரியான சந்தை என்று அமெரிக்கா கணித்து இருக்கிறது. இந்தியாவை வீழ்த்தத்தான் வஞ்சக வலையோடு ஹிலாரி கிளின்டன் வேட்டைக்கு புறப்பட்டு இருக்கிறார்.

"இந்தியாவும், அமெரிக்காவும் விவசாயத்தில் நெருங்கி விட்டது. மேலும் நெருங்கிச் செயல்படும்" என்று சொல்லி, தான் வந்த நோக்கத்தை தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில், வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள உலக வர்த்தக மந்திரிகள் மாநாட்டில், விவசாயத்தை உலக வர்த்தகத்தில் எப்படியாவது சேர்த்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது அமெரிக்கா.

அதுமட்டும் நடந்துவிட்டால்... மானிய விலையில் விளைந்த மலிவு விலை தானியங்கள் இந்தியச் சந்தையில் குவிந்து, உள்ளூர் விவசாயிகளின் சாவு எண்ணிக்கைக் கூடும். மரபு அணுமாற்றப்பட்ட விதை குவிய ஆரம்பித்து பாரம்பர்ய விதைகள் முற்றிலுமாக அழித்தொழிக்கப்படும்.

வருங்காலத்தில், பருப்புக்கும் எண்ணெய்க்கும் மட்டுமல்ல, அரிசிக்கும், கோதுமைக்கும்கூட திருவோடு தூக்க வேண்டிய ஆபத்து வந்துவிடும்.

"பக்கத்துவீட்டில்தானே புகைகிறது. நான் நிம்மதியாக தூங்கப் போறேன்' என்று நினைத்து நீங்கள் ஒதுங்கியிருந்தால்... உங்களை மட்டுமல்ல, ஊரையும் எரிக்கவே செய்யும் அமெரிக்கா பற்ற வைத்திருக்கும் இந்த வியாபார நெருப்பு!