Showing posts with label வறுமை. Show all posts
Showing posts with label வறுமை. Show all posts

Wednesday, April 27, 2011

பட்டினி சாவுகள்

இந்தியா சக்தி வாய்ந்த நாடு என்கிறீர்கள். அதேநேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நாட்டில் போதுமான அளவுக்கு உணவு தானியம் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. மக்களுக்குப் பயன்படாமல், குடோன்களில் அவை நிரம்பி வழிவதால் என்ன பயன்? பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா என இரண்டு இந்தியா இருக்க முடியாது'
-இது, மலையில் ஒளிந்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு மாவோயிஸ்ட் தலைவர் கொடுத்த குரல் அல்ல... இந்திய நாட்டின் உச்சபட்ச அதிகார அமைப்புகளில் ஒன்றான உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கும் குரல்தான்!

பட்டினிச் சாவுகள், பொதுவினியோக முறையில் நடக்கும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையின்போதுதான் அரசுக்கு எதிராக சவுக்கு சொடுக்கி இருக்கிறார்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் வர்மா ஆகியோர்.


'விளைச்சல் நன்றாக இருக்கிறது. தானிய கையிருப்பு போதுமானதாக இருக்கிறது' என்று அரசு சொல்வதே ஒரு நாடகம். மக்களின் வாங்கும் சக்தி மோசமாக இருப்பதால், எதையும் வாங்கி உண்ண முடியவில்லை. அதனால்தான் உபரியாகி குடோனில் குவிகின்றன தானியங்கள். அந்த விஷயத்தை மறைத்துவிட்டு, 'ஏற்றுமதி செய்யும் அளவுக்கு விளைந்து குவிந்து இருக்கிறது' என ஏமாற்றுகிறார்கள்.

'வாங்கும் சக்தி கூடி விட்டது... விலைவாசி உயர்வு ஒரு பெரும் பிரச்னை இல்லை’ என்று கூறும் அரசியல்வாதிகளை நீதிமன்றக் கூண்டுகளில் நிறுத்தி விசாரிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் உண்மை புரியும்... அவர்களின் பொய் முகமும் கிழியும்.

இன்றைய நிலையில் ஒரு நபருக்கு ஓராண்டுக்கான உலக சராசரி உணவு 309 கிலோ கிராம். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை 180 கிலோ கிராம் மட்டுமே. இதன் காரணமாக, இந்தியாவில் கர்ப்பிணிகள் சத்துக்குறைந்தவர்களாக உள்ளனர்... குழந்தைகளும் குறைபாட்டுடன் பிறக்கின்றன. இது எதிர்கால இந்தியாவையே முற்றிலும் முடக்கிவிடக் கூடியது என்பதை அரசு உணரவேண்டும்.

இந்த விஷயம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனமும், ஐக்கிய நாடுகள் சபையும் பல முறை எச்சரிக்கை சங்கை ஊதி விட்டன. ஆனாலும் அரசு விழித்து கொள்ளவில்லை. நல்லவேளையாக உச்ச நீதிமன்றம் சவுக்கு எடுத்துள்ளது. இனியாவது நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

நன்றி : தூரன் நம்பி

Thursday, June 10, 2010

நாளைய உணவு...

மீண்டும் மீண்டும் நான் பின்வரும் இந்த கருத்தை பதிவிடும் நோக்கமே, அதன் முக்கியத்துவத்தை பல பேருக்கு கொண்டு சேர்ப்பது தான்.

தயவு செய்து கொஞ்சம் சிந்தியுங்கள்...
என் மனதில் தோன்றியதை இங்கே பதிவிடுகிறேன்...

* இன்று எங்கள் கிராமத்தில் சுமார் 45-50 வயதுக்கு குறைவான யாரும் விவசாயத்தில் இல்லை.

* விவசாய நிலம் வைத்திருக்கும் குடும்பங்களிலிருந்து 35 வயதிற்குட்பட்ட எவர் ஒருவரும் இன்று விவசாயத்தில் இல்லவே இல்லை. ஒன்று படித்து வெளியூரில், வெளிநாட்டில் வேலையில் இருந்து நன்றாக பணம் சம்பாதிக்கிறார்கள் அல்லது பக்கத்து நகரங்களில் விவசாயம் தொடர்பில்லாத வியாபாரம், தொழிலில் இருக்கிறார்கள்.

* இன்று விவசாயம் நிலம் வைத்திருப்பவர் அல்லது விவசாய நிலத்தில் உழைப்போரின் ஒரே இலக்கு தன் பிள்ளைகளை எப்படியாவது நன்றாகப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் அல்லது ஒரு தொழில் ஆரம்பித்திட வேண்டும்.

*விளைவித்த தக்காளி கிலோ நாலாணாவிற்கு விற்க வேதனைப்பட்டு, கூடை கூடையாய், வருடா வருடம் நடுச் சாலையில் கொட்டி அழிக்கப்படும் அவலம் இன்றும் இருக்கத்தானே செய்கிறது. எந்த அரசாங்கம் அக்கறையோடு தேவையறிந்து, விவசாயிக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது அல்லது உதவியிருக்கிறது?

*எப்போது தேவை அதிகமாகும், எப்படி ஏற்றுமதி செய்வது அல்லது எப்படி அதை பதப்படுத்திப் பாதுகாத்து சரியான நேரத்தில் விற்பது என்று?
(2009 ஆம் ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் சர்க்கரைத் தட்டுப்பாடு வருமென்று, நிறைய வெளிநாட்டு விவசாயிகள் முன்னரே அறிந்து, அதிக விளைச்சலை உருவாக்கி, நமக்கு ஏற்றுமதி செய்திருக்கின்றனர்)*கடந்த பத்து ஆண்டுகளில் துவக்கப்பட்ட பொறியியல் கல்லூரி மற்றும் வியாபார மேலாண்மை படிப்புகளின் எண்ணிக்கையில் ஒரே ஒரு சதவிகிதமாவது விவசாயக் கல்லூரிக்கோ அல்லது விவசாயம் குறித்த படிப்புகளுக்கோ கவனம் கொடுக்கப் பட்டிருக்கிறதா?

இப்போது நிலம் வைத்திருப்போர் அல்லது உழைப்போரின் உழைக்கும் திறன் இன்னும் அதிகபட்சம் 10-15 ஆண்டுகளில் மங்கித்தானே போய்விடும். அதன்பின் அந்த நிலங்களில் யார் விவசாயம் செய்வது?

சமீபத்தில் கண்டமேனிக்கு திறக்கப்பட்டது பொறியியல் கல்லூரிகளே. சிவில் படித்தார்கள், சாரம் போட்டு வருடக்கணக்கில் கட்டியதை, இன்று எங்கேயோ செய்து பத்திரமாக எடுத்து வந்து கிரேன் வைத்து தூணின் மேல் ஏற்றி அழகாகப் பொருத்தி விட்டுப் போய்விடுகிறார்கள். ஆச்சரியமான ஒன்றுதான், தவறேதுமில்லை. இது போல் ஒவ்வொரு துறை பிரிவிலும் படித்தவர்கள் பிரமிக்கக்கூடிய அதிசயத்தை விநாடி நேரத்தில் நடத்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன என்னவோ படிப்பென்று சொல்லி, எத்தனை எத்தனையோ கல்லூரிகளைத் திறக்கப்பட்டதே... வளர்ச்சி என்ற அடிப்படையில், விவசாய பூமியை விலகிச் சென்ற மனிதர்களால் தங்கள் விஞ்ஞானத்தால், அரசியலால் அல்லது ஏதோ ஒரு தொழிலால் ஒரே ஒரு நெல் மணியை உருவாக்க முடியுமா?

ஐக்கிய நாடுகள் சபை ஒரு மனதி இறுதியில் 'இன்னும் நாற்பது வருடங்களில் இந்தியாவிலும், சீனாவிலும் தங்கள் நடவடிக்கையை மாற்றிக் கொள்ளாவிடில் மிகப் பெரிய உணவுத் தட்டுப்பாடு வருமென்று' சுட்டி காட்டி இருக்கிறது.. எனக்கென்னமோ அதற்கு நாற்பது வருடங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

காடுகளை அழிப்பதில் சிறிதும் குற்ற உணர்வில்லாத நாம், பருவ மழை பொய்த்துப் போவதைப் பற்றி என்றாவது, ஒரு விநாடி மனம் கலங்கியிருகிறோமா?

காமராஜருக்குப் பின் தமிழ்நாட்டில், யாராவது அணை கட்டியிருக்கிறார்களா?

சாகடிப்பட்ட அணைகள் ஒன்றா, இரண்டா? சாமாதி கட்டப்பட்ட ஏரிகள், குளங்கள் எத்தனை ஆயிரம் இருக்கும்?

இது பற்றி எந்தச் சிந்தனையும் இல்லாதவர்களைத் தானே மாற்றி மாற்றி ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கிறோம்.

விவசாயத்தை, விவசாயிகளை வஞ்சித்த உலகம் அதன் பலன்களை அனுபவிக்கப் போவது மிக அருகாமையில் தான் இருக்கிறது.

அப்போது பசிக்கும் வயிற்றுக்கு யார் வந்து சோறு போடுவது.

Thursday, November 5, 2009

இந்தியாவும் உணவு தட்டுபாடும்

பஞ்சமும் பட்டினியும் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் புதிதல்ல. வீங்கிய தலைகளும் ஒட்டிய வயிறுகளும்தான் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளின் அடையாளம். மழை பொய்த்துப் போவதும், அறுவடை குறைவதும், அதனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதும் இங்கு சகஜம். அந்த வகையில் இப்போது, சோமாலியாவைச் சுற்றிய ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சோமாலியா தவிர, எரித்திரியா, கென்யா, டிபெüடி, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் இதில் அடக்கம்.

இங்கெல்லாம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக கடந்த சில மாதங்களாகவே ஐ.நா. எச்சரித்து வந்தது. இப்போது அந்த நிலை வந்தேவிட்டது. சுமார் 1.4 கோடி பேர் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள். கர்ப்பிணிகளும் குழந்தைகளும் ஊட்டச்சத்து இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் காப்பாற்ற சூடான் வழியாகவும், சோமாலியத் துறைமுகம் வழியாகவும் கூடுதலாக உணவை அனுப்ப ஐ.நா. முயன்று வருகிறது.

உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மழை பொய்த்துப் போவது மட்டுமே காரணமல்ல. அரசின் நிர்வாகச் சீர்கேடுகளும் கொள்கைகளும்கூட பஞ்சம் ஏற்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உதாரணமாக எத்தியோப்பியாவில் சில இடங்களில்தான் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் ஓரளவு மழை பெய்திருந்தும்கூட அறுவடை வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதற்குக் காரணம் அரசின் கொள்கை.

ஆப்பிரிக்க உணவுத்தட்டுப்பாடு குறித்து எச்சரித்த ஐ.நா.வின் அதே அமைப்பானது, இந்தியாவிலும் ஒரு தன்னார்வ அமைப்புடன் சேர்ந்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் எடை குறைவாக, ஊட்டச்சத்துக் குறைவாக இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டது. அதிலும், 18-வயதுக்கு உள்பட்டோரில் 50 சதவீதம் பேருக்கு போதுமான ஊட்டச்சத்துக் கிடைக்கவில்லை என அந்த ஆய்வு முடிவுகளில் தெரியவந்தது.

ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவாக இருப்பதற்கும், இந்தியர்கள் ஊட்டச்சத்துக் குறைவாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஆப்பிரிக்காவில் விவசாய உற்பத்தி போதுமான அளவுக்கு இல்லை.

மழைநீரைச் சேமிக்கும் குளங்களும் ஏரிகளும் அணைக்கட்டுகளும்கூட குறைவு. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் அளவுக்கு வலுவான பொருளாதாரக் கட்டமைப்பும் இல்லை.

ஆனால், இந்தியாவில் வறட்சி காரணமாக விவசாய உற்பத்தி குறைந்தாலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தட்டுப்பாட்டைப் போக்கும் அளவுக்கு பொருளாதார வலு இருக்கிறது.

அப்படியிருந்தும் ஒருபகுதி மக்கள் ஊட்டச் சத்து இல்லாமல் வாழ்கிறார்கள் என்றால், உணவுப் பொருள்கள் அனைவருக்கும் கிடைக்காததுதான் காரணம்.

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு இல்லையென்றாலும்கூட, அடித்தட்டு மக்களால் அணுக முடியாத அளவுக்கு விலைவாசி இருந்தால் ஊட்டச்சத்துக் குறைவும் பட்டினியும் இருக்கும் என்பதுதான் நிபுணர்கள் கருத்து.

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அந்த நிலையை மாற்ற இந்திய அரசும், மாநில அரசுகள் முயன்று வருகின்றன. ஆனாலும், எல்லா வகையான உணவுப் பொருள்களும் தேவையான அளவுக்குக் கிடைக்கும் வகையில் அந்தத் திட்டம் இன்னும் தீவிரமாக்கப்படவில்லை. வருங்காலத்தில்கூட அது சாத்தியமா என்கிற கேள்வியும் இருக்கிறது.

பட்டினியால் இறப்பவர்கள் பற்றி இந்தியாவில் இப்போது தகவல் இல்லை. ஆனால், பெரும்பாலான மரணங்களுக்கு ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக இருக்கிறது. இதுவும் பசி, பட்டினியின் இன்னொரு முகம்தான்.

இதைத் தவிர்க்க வேண்டுமானால், நமது புதிய பொருளாதாரக் கொள்கையில் சிக்கி அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை அக்கறையுடன் செயல்படுத்த வேண்டும்.

எல்லா உணவுப் பொருள்களின் விலையும் வெளிச்சந்தையில் விண்ணை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும்போது, பொதுவிநியோகம் குறைந்த விலையில் ஒன்றிரண்டு பொருள்களை மட்டும் தருவது பெரிய பயனைத் தராது. இதற்குப் பதிலாக, மலிவான விலையில் நிறைய உணவுப் பொருள்களை போதுமான அளவுக்குக் கொடுக்கலாம்.

அனைவருக்குமே தரமான உணவு கிடைக்காதவரை இந்தியாவும் ஒரு பட்டினி தேசம்தான். நாட்டில் ஒரு கூட்டம் எலும்பும் தோலுமாகப் பசித்திருக்க, விண்ணில் சந்திரயானை ஏவுவதாலும், அணுகுண்டுகளை வெடிப்பதாலும் மட்டும் நாம் வல்லரசாகிவிட முடியாது. பட்டினி தேசங்களுக்கு சந்திரயானையும் அணுகுண்டுகளையும் விட முதன்மையான தேவை உணவுதான்.

Wednesday, October 21, 2009

உலகம் எதை நோக்கி...?

உலகம் முழுவதும் தினமும் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆய்வறிக்கை, அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவில்லை என்றால், மிகவும் மோசமான பாதிப்புக்களை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு - வேளாண்மை அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம் (United Nation's The Food and Agriculture Organization and the World Food Program) அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், "2009-ம் ஆண்டில் உலகம் முழுவதும் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை 1.02 பில்லியன் (100 கோடிக்கும் மேல்) அதிகரித்துள்ளது. இது, கடந்த 40 ஆண்டுகளில் உச்சபட்ச அவல நிலை," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள 20 நாடுகள் உள்ளிட்ட மொத்தம் 30 நாடுகளில் அவசரகால உதவிகள் தேவைப்படுகிறது என்று அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக அளவில் ஒவ்வொரு 6 நொடிகளிலும் ஊட்டக் குறைவு காரணமாக ஒரு குழந்தை மரணத்தைத் தழுவுகிறது என்ற அதிர்ச்சி தரும் தகவலைத் தெரிவிக்கும் ஐ.நா., "இந்த அபாய நிலையை உணர்ந்து, வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் ஆகியவை இணைந்து உலக அளவில் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,' என்று அறிவுறுத்துகிறது.

சோமாலியாவில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அங்குள்ள குழந்தைகளுக்கு தினமும் ஒரு வேளை உணவு மட்டுமே கொடுக்கக் கூடிய அவலத்தில் பெற்றோர்கள் உள்ளனர்.

கென்யாவில் விலங்குகள் அழிவதாலும், வேளாண்மை பாதிப்புக்குள்ளானதாலும் 30 லட்ச மக்களுக்கு அவசரகால உணவு தேவைப்படுகிறது.

வேளாண் உற்பத்தியின் வீழ்ச்சி, உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றுடன் உலகப் பொருளாதார நெருக்கடியும் இணைந்து சதிராட்டம் ஆடியாதால், 2009-ல் 100 கோடிக்கும் மேலான மக்கள் பட்டினியால் அவதியுறும் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளில் 62 கோடியே 20 லட்சம் மக்கள் அன்றாடம் பட்டினியால் வாடி வருகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் இந்த எண்ணிக்கை 26 கோடியே 50 லட்சமாக இருக்கிறது.

இந்த அவலநிலைக்குத் தீர்வாக இருவழிப் பாதை அணுகுமுறையை ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைக்கிறது...

"திடீர் உணவுப் பஞ்சத்தால் ஏற்படும் பட்டினிப் பிரச்னையை தீர்ப்பதற்கு குறுகிய கால நடவடிக்கையாக பணத்தை செலவிடுவதோடு மட்டுமின்றி, உணவு உற்பத்தியைக் கூட்டும் வகையில் வேளாண் துறையில் நீண்ட கால முதலீடுகளுக்கு வழிவகுக்க வேண்டும்," என்பதே அந்த அணுகுமுறை. உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் வேளாண் துறையில் மிகுதியான அளவில் முதலீட்டை ஒதுக்கினால் மட்டுமே, எதிர்வரும் காலத்தில் பட்டினி அவலத்தைக் களைக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

அடுத்த தலைமுறைக்கு ஒரு வேலை உணவு கூட நம்மால் அளிக்க இயல வில்லை என்றால், உலகம் எதை நோக்கி செல்கிறது என்று சற்றே யோசியுங்கள். மிக பெரிய வன்முறைக்கு இது அடிகோலிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி...

Wednesday, October 7, 2009

வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே

ஒவ்வொரு இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள விபரம் :
மாத சம்பளம் --- ரூ 12,000

அரசியல் செலவினங்களுக்கு --- ரூ 10,000

அலுவலக செலவினங்களுக்கு --- அம்மா 14,000

போக்குவத்து செலவினங்களுக்கு --- ரூ 48,000

பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஒரு நாளைக்கு --- ரூ 500

முதல வகுப்பு ஏ சி இரயில் பயணம் முற்றிலும் இலவசம் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் .

முதல வகுப்பு விமான பயணம் நாற்பது முறை செல்லலாம் உடன் மனைவி அல்லது பி ஏ வை அழைத்து வரலாம்

டெல்லியில் தங்கும் விடுதி இலவசம்

மின்சாரம் 50,000 யுநிட் வரை இலவசம்

ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் உள்ளூர் தொலைபேசி அழைப்புகள் இலவசம்

ஆகமொத்தம் ஒரு எம் பி க்கு ஒரு மாதத்தி்ற்கு ருபாய் 260,000 இரண்டு லட்சத்து அறுபது ஆறாயிரம் ருபாய் செலவாகிறது

மொத்தம் உள்ள ஐநூற்றி முப்பது நான்கு எம்பி ஐந்து வருடத்திற்கு 854,40,00000 (எட்நூற்றி ஐம்பத்து நாலு கோடியே நாற்பது லட்சம்)

அவர்களுக்கு ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்து, சம்பளமாய் தனது வரி பணத்தையும் தந்து கொண்டிருக்கும் இந்த நாட்டு மக்களின் இன்றைய நிலை. . . ?
மேலும் படியுங்கள்...



42% இந்திய மக்கள் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.

42.5% இந்திய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தேவையான அளவு கிடைப்பதில்லை.

25% இந்திய மக்கள் தினமும் பசித்த வயிறுடன் உறங்குகிறார்கள்.

2002 முதல் 2006 வரையான நான்கு ஆண்டுகளில் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை 17,500.

இன்றைய தேதியில் ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார்.

இன்றும் கிராமத்தில் தினமும் 5 மணி நேர மின் வெட்டு.

தமிழகத்தில்

36.32 லட்சம் குடும்பத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வந்தவர்கள்.


மாத வருவாய் ரூ.250-க்கும் குறைவாக ஈட்டுவோர் 7.21 லட்சம் குடும்பத்தினர்

இரு உடைகளுக்கும் குறைவாக வைத்திருப்போர் 5.59 லட்சம் குடும்பத்தினர்.

தினசரி ஒரு வேளையும், அதற்குக் குறைவாகவும் உணவு பெறுவோர் எண்ணிக்கை மட்டும் 14 லட்சம் குடும்பங்கள்.

கொத்தடிமைகளாக இருக்கும் குடும்பங்கள் 5.92 லட்சம்.

குழந்தைத் தொழிலாளர்கள் கொண்ட குடும்பங்கள் 4.83 லட்சம்.

ஒரு ருபாய் ரேஷன் அரிசியை வாங்க கால்கடுக்க நிற்கும் மக்கள்.

அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள் அவல நிலை.

என இந்த வலைப்பூ பத்தாது.

நல்ல வேலை பாரதி உயிருடன் இல்லை...

Friday, September 25, 2009

என் இந்திய நாடு

'உலகிலேயே அதிகமான ஏழைகள் வாழும் நாடு இந்தியா. அதிகமான மக்கள், பசியோடும், பட்டினியோடும் படுக்கைக்குப் போகும் நாடு இந்தியா. குறைப்பிரசவம் மற்றும் குறைவான எடையோடு பிறக்கும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம்' -இப்படித்தான் சொல்கின்றன உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள். ஆனாலும், 'மிகவேகமாக வளரும் நாடு இந்தியாதான்' என்று மூச்சுக்கு முந்நூறு தடவை நமது பிரதமர் மன்மோகன் சிங் சொல்லிக் கொண்டு அலைவது தனிக்கதை.

நம் பாரதத் திருநாட்டில், ஏழைகளுக்காக உழைக்கும் இந்த மக்கள் சேவகர்களின் சில திருவிளையாடல்களைப் பாருங்கள்.

கொள்கையே இல்லாத வெளியுறவுத் துறைக்கு இரண்டு மந்திரிகள். ஒருவர் கேபினட் அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா. தினம் ஒரு லட்சம் ரூபாய் செலவில் இல்லாத கொள்கையைப் பற்றி 'ரூம்' போட்டு யோசிக்கிறார்.

இன்னொருவர் இணையமைச்சர் சசிதரூர். இவர்தான், விமானத்தில் சாதாரண வகுப்பை, 'மாட்டுத் தொழுவம்' என்று வர்ணித்தவர். இவரும் தன் பங்குக்கு தினம் 40,000 ரூபாய் செலவில் ரூம் போட்டு தன் 'சிந்தனாசக்தி'யைப் பட்டைத் தீட்டி, நாட்டு மக்களின் நலனுக்காக உழைப்பவர்.


'சீனா தலையில் குட்டுகிறது. இலங்கை காலை வாருகிறது. பாகிஸ்தான், பர்மா இரண்டும் பக்கத்துக்கு ஒன்றாக இடிக்கிறது. நட்பு நாடான நேபாளம்கூட இப்போது 'நோ' சொல்லி விட்டது. ஆனால், இது எதைப் பற்றி- யும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்திய வெளியுறவுத் துறையும், மத்திய அரசும் மவுனச் சாமியார்களாக இருக்கின்றன.

மகாராஷ்டிரா மாநிலம், விதர்பாவில், விவசாயிகள் கடன் பிரச்னையால், கொத்துக் கொத்தாக தற்கொலை செய்துகொண்டிருப்பதை யாரும் மறந்து விட முடியாது. அங்கு 80% விவசாயிகள் கட்டமுடியாமல் போன அதிகபட்ச கடன் தொகை எவ்வளவு தெரியுமா? சொன்னால் நம்ப முடியாது. ஒவ்வொருவருக்கும் வெறும் 50,000 ரூபாய்தான். அதாவது, பாரதத் திருநாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவின் அரைநாள் அறை வாடகை.

தனிவிமானத்திலும், ஹெலிகாப்டர்களிலும் மட்டுமே பறந்து வழக்கப்பட்டவர்களுக்கு, வறட்சி திடீரென்று ஞானக் கண்களைத் திறந்து விட்டிருக்கிறது. மாட்டு வண்டிகளிலும் ரயிலிலும் பயணம் செய்து செலவைக் குறைப்பதாக, செய்திகள் கசிகின்றன. விமானத்தில் சென்றால்கூட, ஒருவரோடு செலவு முடிந்து விடும்.

ரயிலில் போனால்... 10-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் புடைசூழ, அக்கம்பக்க பயணிகள் அடிவயிற்றில் அக்னியைச் சுமக்க, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் காவலர்கள் கெடுபிடியில் சிக்கி பயணிகள் தவிக்க, ஏழை இளவரசர் ராகுல் பயணம் செய்தாராம். சமீபத்தில், தமிழகத்தில் ராகுல் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்ததற்கு ஆன செலவு 1 கோடியைத் தாண்டுமாம். கேட்டால்... சிக்கன நடவடிக்கை...

விமானப் பயணத்தையே, 'மாட்டுத் தொழுவம்' என்று பரிகாசம் செய்யும் கதர் கண்மணிகளே! தமிழ்நாட்டில் ஒரு முறை பஸ்சில் பயணம் செய்து பாருங்கள்... செம்மறி ஆட்டுத் தொழுவத்தைவிட கேவலமாக இருக்கிறது. மூன்று பேர் அமரும் இருக்கையில், முக்கால் மனிதன் சீட்டுக்கு வெளியில்தான் தொங்க வேண்டும்.

முன்பதிவு இல்லாத ரயில் பயணமோ, நரகத்தில் இருப்பதைவிட கொடுமையானது. 72 பேர் பயணம் செய்ய வேண்டிய பெட்டியில், இருநூறுக்கும் அதிகமானவர்களைச் செம்மறி ஆடுகளைப் போல அடைக்க வேண்டியிருக்கிறது. கழிவறையிலும் கால் வைத்து நிற்க இடமில்லாமல், பயணம் செய்யும் மக்களுக்காகத்தான், தினம் ஒரு லட்சம் செலவில் ரூம் போட்டு யோசிக்கிறார்கள், நமது பாரததேசத்தின் அமைச்சர் பெருமக்கள்...

ஊழலும் ஊதாரித்தனமும், நமது அரசியல்வாதிகளின் உடன் பிறப்புக்கள். கோடிகோடியாக கருப்புப் பணம் சுவிஸ் வங்கியிலும் இந்திய நிலச் சந்தையிலும் புதைந்து கிடக்கிறது.

இந்தக் கொடூர நாடகமாடிகளின் கூத்துக்களை எண்ணிப் பார்க்கும்போது, யாரோ ஒரு கவிஞன் எழுதிய வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன.

'நான்முகனே...

மீண்டும்
என்னை
இந்தியாவில்
பிறக்க வைக்க நினைத்தால்...
இரைப்பை இல்லாமல்
பிறக்க வைக்கவும்!'

-பசுமை கட்டுரை-

Monday, June 15, 2009

குழந்தையும் தெய்வமும் ஒன்று








"பருவத்தே பயிர் செய்' என்பது பழமொழி. பருவம் தவறிப் பயிர் செய்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. எதிர்பாராத விளைவுகளே ஏற்படும். குழந்தைத் தொழிலாளர் பெருகுவது தேசத்துக்கும், சமுதாயத்துக்கும் அவமானம்; மன்னிக்க முடியாத குற்றம்.

புகழ்பெற்ற "ராய்ட்டர்' என்ற செய்தி நிறுவனம் எடுத்த ஆய்வில் குழந்தைகள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடங்களாக மூன்று நாடுகளைக் குறிப்பிட்டிருந்தது. அவை ஈராக், சோமாலியா மற்றும் இந்தியா, (பயங்கரவாத மற்றும் ஏழ்மையான நாடு,அடுத்து நம் நாடு ) இந்தியாவுக்கு இந்த இழிநிலை வருவதற்கு என்ன காரணம்? குழந்தைகளிடம் நமக்குள்ள அக்கறையற்ற போக்குதான்.

இதைவிடத் திடுக்கிடச் செய்யும் மற்றொரு தகவல் ஆப்பிரிக்கக் குழந்தைகளைவிட இந்தியக் குழந்தைகளிடம் சத்துணவுப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது என்னும் அறிவிப்பாகும். இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் அங்குள்ள குழந்தைகளில் 25 விழுக்காட்டினர் சத்துணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். இந்தியாவில் மட்டும் சுத்தமான குடிநீர் கிடைக்காமையால் ஆண்டுதோறும் 4 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறந்து போகின்றனர் என்பது மிகப்பெரிய அவலம்.

இந்தியாவில் 10 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. 3 கோடி பேருக்கு இருக்க இடமே இல்லை. ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தின் குடிசை இடிக்கப்பட்டு தெருவில் நின்ற காட்சியை நினைத்துப் பார்த்தால் இதன் உண்மை தெரியும்.
இந்தியாவில் 1 கோடியே 10 லட்சம் குழந்தைகள் எந்த ஆதரவும் இல்லாமல் தெருவில் திரிகின்றனர். இந்தியாவில் குழந்தைகளின் நலனுக்காக நிதிநிலை அறிக்கையில் 5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது. "அனைவருக்கும் கல்வி' என்னும் அரசுத்திட்டம் இன்னும் எல்லோருக்கும் சென்று சேரவே இல்லை. இப்போது படித்து வருபவர்களில் 50 சதவீதம் பேர் தொடக்கக் கல்வியை முடிக்கும் முன்பே பள்ளியிலிருந்து நின்று விடுகின்றனர்.
இந்தியாவில் 1 கோடியே 10 லட்சம் குழந்தைகள் எந்த ஆதரவும் இல்லாமல் தெருவில் திரிகின்றனர். இந்தியாவில் குழந்தைகளின் நலனுக்காக நிதிநிலை அறிக்கையில் 5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது. "அனைவருக்கும் கல்வி' என்னும் அரசுத்திட்டம் இன்னும் எல்லோருக்கும் சென்று சேரவே இல்லை. இப்போது படித்து வருபவர்களில் 50 சதவீதம் பேர் தொடக்கக் கல்வியை முடிக்கும் முன்பே பள்ளியிலிருந்து நின்று விடுகின்றனர்.


"குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்பது பெரியோர் பொன்மொழி. தெய்வத்தைக் கொண்டாடுகிறோம். குழந்தைகளைக் கொண்டாட வேண்டாமா? இதே நாட்டில் தான் வடக்கே ஒரு பொற்கோவில் ,தெற்கே ஒரு பொற்கோவில் என்றும் , ஒரே நாளில் கோடிக்கணக்காக குவிக்கும் ஆலையங்கள் என்றும் தெய்வத்தை கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு தெரியாதா "குழந்தையும் தெய்வமும் ஒன்று " என்று.

என்ன செய்ய இரவு வீடு திரும்பும் பொழுது சிக்னலில் கையேந்தும் சிறுவனை காணும் பொழுதும், மதியம் உணவு உண்ணும் உணவகத்தில் மேஜை துடைக்கும் சிறுவனை காணும் பொழுதும், காலை டீ கடையில் கிளாஸ் கழுவும் சிறுவனை காணும் பொழுதும் மனம் வலிக்க தான் செய்யும்.


அனைத்தும் அறிந்தும் ஒண்ணுமே செய்ய இயலாதவனாய் ஒரு சாமான்யன்.


Thursday, March 26, 2009

பசி





பொதுவாக பசியென்றால் சாப்பிடனும் என்றோ, இன்னும் சாப்பிடவில்லையே என்பது மட்டுமே நம் நினைவுக்கு வரும். இதற்கப்பாலும் பல கூறுகள் பசியில் உண்டென்பதை பெரும்பாலோர் அறியமாட்டார்கள். பசி என்பது பல்வேறு தன்மைகளையும், தேவைகளையும் உடையது.

மருத்துவத்துறையினராலும், சமூகவியல் ஆய்வாளர்களாலும் கீழ்க்கண்டவாறு பட்டியலிடப்படும்.


1) கடும்பசி (Acute Hunger)

2) நெடும்பசி (Chronic Hunger)

3) தனிப்பசி (Specific Hunger)

4) சமச்சீர் உணவுப்பசி (Multiple Hunger)

5) ஊட்டச்சத்துப் பசி (Mal Nutritional Hunger)


இப்படிப்பட்ட பசி நிலைகளால் உலகில் வாடுவோர் 75% உள்ளனர். இந்தியாவில் மட்டும் 90% மக்கள் (அனைத்துவகை) பசிகளுக்கு அடிமையாய் உள்ளனர்.

1) கடும்பசி (Acute Hunger)

உயிர் வாழ இப்பசியை அடக்குதல் வேண்டும். அன்றாடம் உணவு தேவைப்படும் அத்தியாவசியத்தை உணர்த்தும் பசி. உணவு அளவில் குறையும்போது ஆற்றல் குறைந்து எதுவும் செய்யமுடியாமல் ஒடுங்கும் நிலை ஏற்படுகிறது. இதைத்தான் பாரதி சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் வெறுஞ்சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம் என்றான். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றும் குறிப்பிட்டது இப்பசியைத்தான். கூழோ, கஞ்சியோ, ஹம்பர்கரோ, வளர்க்கும் குரங்கையோ*, எதையாவது...எதையாவது தின்று அடக்கவேண்டிய பசி.


* 7 ஆண்டுகளுக்கு முன்பு உத்திரப்பிரதேச மாநிலத்தில் கிராமப்புறங்களில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் காரணமாக, கிராம மக்களில் பெரியவர் ஒருவர் தான் வளர்த்த குரங்கைக் கொன்று தின்று விட்டார் என்றும், இன்னும் சிலர் விஷத்தன்மை வாய்ந்தது என்று தெரிந்தும் ஒருவகைக் கிழங்கை வேறுவழியின்றி உண்டு சில நாட்களில் இறந்திருக்கிறார்கள் என்றும் இந்தியா டுடே இதழில் வந்த கட்டுரையில் படித்தேன்.


2) நெடும்பசி (Chronic Hunger)


பஞ்சத்தினாலும், இயற்கையின் சீற்றங்களாலும், ஏமாற்றங்களாலும், உணவுற்பத்திக்கு தேவையான அத்தியாவசிய கட்டமைப்பின் குறைவினாலும், சமூக அமைப்பின் சுரண்டல்களாலும், போர், அகதியாக்கப்படுதல் போன்ற சமூகப்பிரச்சினைகளாலும் நீண்டகாலமாக நிர்ப்பந்தமான பட்டினியால் ஏற்படும் பசி.


WHO வின் 2004ம் ஆண்டறிக்கையின் படி, ஒவ்வொரு நாளும் , 800 மில்லியன் மக்கள் பசியோடு உறங்குகிறார்கள், நீண்டகாலமாக நிர்ப்பந்தமான சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு பருவகால மாற்றத்தின் போதும் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால் வாடுகிறார்கள். பசியாலும், ஊட்டச்சத்துக் குறைவாலும் ஏற்படும் நேரிடையான அல்லது மறைமுகமான பாதிப்பால் ஒவ்வொரு வருடமும் 7 மில்லியன் குழந்தைகள் 5 வயதை அடையுமுன்பே மரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் ஒருமணி நேரத்தில் உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் சராசரியாக 8,300 பேர் சேர்ந்து கொள்வார்கள். நாளை இந்நேரம் இன்னும் 2 லட்சம்பேருக்கு உணவு தேவைப்படும். இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அதன் தனிதன்மையான தேவைகளோடு இருப்பவர்கள்தாம், இவ்வுலகின் பிரஜையாக இருப்பதற்கு நம்மைப் போலவே எல்லா அடிப்படை உரிமைகளும், அத்தியாவசிய தேவைகளும் உடையவர்கள்தாம்.

ஆனால், பரிதாபம் முறைகெட்ட சமூக அமைப்பாலும், அவர்களின் அத்தியாவசிய வாழ்வாதாரங்களைப் பகிர்ந்தளிக்காத சுரண்டல் மிகுந்த, ஏற்றத்தாழ்வுமிக்க வாழ்வமைப்பாலும் நிராகரிக்கப்பட்டவர்களாக செத்து மடிகிறார்கள். உலகின் வளங்களை எல்லாம் வெறும் இரண்டு விழுக்காட்டினர் சுயநலம் மிகுந்த அரசியல், சமூகப்பொருளாதார கட்டமைப்பால் பயன்படுத்திக் கொண்டு, மீதமுள்ள 98 % மக்களை ஏதேனும் குறையுள்ளவர்களாக விட்டுவிட்டனர்.

உணவுசார் தேவைகளை மதிப்பீடு செய்யும் உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) வல்லுனர்களின் அறிக்கைகளின் படி, ஒவ்வொரு ஆண்டும் 73 மில்லியன் மக்கள் இப்புவியில் மக்கட்தொகையில் இணைந்து கொள்கிறார்கள். அனைவருக்கும் தேவையான உணவுற்பத்தி நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது, ஆனால் பெரும்பான்மையான, தேவையுள்ள (சுமார் 850 மில்லியன்) மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதில்லை என்பது நிதர்சனமான, வருத்தத்திற்குறிய உண்மை. இதில் 95 விழுக்காட்டினர் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ளனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் உபரியான உணவுப்பொருட்கள் வளர்ந்து வரும் நாடுகளின் உணவுத்தேவையுள்ள பெரும்பான்மை மக்களுக்கு சென்று சேரும் ஏற்பாடுகள் இன்னும் சரிவரச் செய்யப்படவில்லை.

குறிப்பாக இந்தியாவில் மட்டும் வறுமைக்கோட்டின் கீழ் 46 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
பசி மனித வாழ்வைச் சீர்குலைக்கிறது. மனித வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்தே இது தன் ஆதிக்கத்தைத் தொடங்கியுள்ளது. தன்னலமும், சுரண்டலும் இதை வளர்த்தன.நெடும்பசியானது மனித இயல்பைச் சிதைக்கும், வலிமையைக் குறைக்கும். பசியினால் எழும் உணவு வேட்கையால் மனிதன் தன்னை மறந்து எதையும் செய்யத்துணிவான். இதனால் அன்பு, அறம், கடமை, பண்பாடு போன்றவற்றை இழக்கவும் யோசிக்கமாட்டான். கொலை, களவு, பூசல், சோம்பல், சோரம்போதல் ஆகிய அனைத்திற்கும் இப்பசியே அடிப்படை. பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும் என்று இதையே குறிப்பிட்டனர்.





(பசி தான் மனிதனின் சகலகுரோதங்களுக்கும் மூலவேர். பசியோடிருப்பவன் எந்த நியாயத்திற்கும் கட்டுப்படமாட்டான். குற்றவாளிகளுக்கு கூட வேளைக்குவேளை சரியாக உணவு வழங்கப்படுகிறது. நம் உடல் தான் நமக்கிருக்கும் ஒரே சாதனம். மனிதன் இருவகைப் பசியால் பீடிக்கப்பட்டிருக்கிறான். உடல் தன்னை வளர்த்துக்கொள்வதற்கு வயிற்றுப் பசியை உருவாக்குகிறது. இன்னொன்று தன்னை போல இன்னொரு உடலை உற்பத்தி செய்வதற்கு காமத்தை இரண்டாம் பசியாக உருவாக்குகிறது. பசியோடு இருப்பவன் காமத்தை விடவும் வயிற்றை நிரப்புவதில் தான் அதிக நாட்டம் கொள்வான் - எஸ்.ராமகிருஷ்ணன், தீராப்பசி)

Saturday, February 21, 2009

வலிப்பது மனம் மட்டுமல்ல உயிரும் தான்...

தனி மனிதனுக்கு உணவில்லையேல் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி கூறினான்.
ஆனால் இன்றோ...
அடபோங்கடா....
நீங்களும் உங்க பணமும்
(புகைப்பட கரு : விகடன் )