Tuesday, June 22, 2010

தமிழ் செம்மொழி மாநாடு

இன்று உலகின் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் கேள்விக்குறியாய் இருக்கும் நிகழ்வு நடக்கப் போகும் "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு". இந்த மாநாடு தேவைதானா என யோசிக்காத தமிழர் ஒருவரும் இல்லை. நம்மைப் போன்ற மக்களின் வரிப்பணத்தில் 200 கோடிக்கும் மேல் செலவு செய்யப் பட்டிருக்கிறது.

இதில் 118 கோடி ரூபாய் 3840 அடுக்ககங்கள் அமைப்பதற்கும், 59.85 கோடி சாலை சீரமைப்பு பணிகளுக்கும் பயன் படுத்தப் படுகின்றனவாம். மேலும் அங்கு பாதுகாப்பு பணிக்காக ஒரு பலூனில் நான்கு கேமராக்கள் பொருத்தப் பட்டு விண்ணில் பறக்க விடப் பட்டுள்ளது. ஒரு கேமராவின் விலை மட்டும் 50 லகரம்.

இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் 200 கோடி என்பது சும்மா என்றே தோன்றுகிறது. எத்தனை கோடிகள் ஆனதோ? இன்னும் எத்தனை ஆகுமோ? நாட்டில் விவசாயப் படுகொலைகள், பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இப்படிப் பட்ட மாநாடு இவ்வளவு பொருட் செலவில் தேவைதானா?

3840 அடுக்ககங்கள் இவ்வளவு விரைவில் சாத்தியமாகும் போது ஏழை மக்களுக்கும், சுனாமியால் வீடிழந்தோருக்கும் கட்டிக் கொடுக்கப் படும் வீடுகள் மட்டும் ஏன் வருடக் கணக்காகிறது?

இத்தனை கோடிகள் செலவில் இவ்வளவு நாள் கவனிப்பாறற்றுக் கிடந்த சாலைகள் துரிதமாக சீரமைக்கப் படும் போது, இவ்வளவு நாள் செய்யப் படாதது ஏன்?

இதுவரை சாலைகள் சீரமைப்பு என்ற பெயரில் கோவையை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப் பட்டிருக்கின்றன.ஊட்டி சாலையில் 600க்கும் மேற்பட்ட மரங்களும், திருச்சி செல்லும் சாலையில் 200க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டித் தள்ளியிருக்கின்றனர். இங்கு வெட்டப் பட்டவை வெறும் மரங்கள் அல்ல. நம் மனிதமும் தான்.

மரங்களைக் கொன்று இப்படி ஒரு விழா தேவைதானா? மரங்களுக்காக மக்கள் ஏங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கும் போது இவ்வளவு மரங்கள் கொலை செய்யப் பட்டு ஒரு தலைவனின் ஆசைக்கு விழா எடுப்பது நியாயம் தானா?

"ஒரு பக்கத்து மரங்களை மட்டும் வெட்ட சொல்லிருக்கோம், தேவைப் பட்டா இன்னொருப் பக்க மரத்தையும் வெட்ட சொல்லிருக்கொம்" என கலக்டர் முன்னர் கூறியிருந்தார். மரங்களை வெட்டி மனிதம் அழிக்கும் இந்த மிருகப் பணிக்கு எடுக்கப் படும் விழாவிற்கு பெயர் "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு".

இதெல்லாம் பார்த்தப் பின்பும் நம் மக்கள் ஒரு ரூபாய் அரிக்காகவும், ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத கலர் டி.விக்காகவும் மீண்டும் வாககளிக்கப் போவது உறுதியே. என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தேர்தலின் போது என்ன சொல்லி ஓட்டு வாங்கலாம் என்பது அந்த அரசியல்வியாதிகளுக்குத் தெரியும்.

"இந்த மாநாட்டின் மூலம் எத்தனைப் பேருக்கு வேலைக் கிடைச்சிருக்குத் தெரியுமா?" என என் நண்பன் கேட்டான்.

எத்தனை பேருக்கு?
எவ்வளவு நாளைக்கு?
எவ்வளவு ரூபாய்க்கு? என்றேன்.

அவனிடம் பதிலில்லை.

எத்தனை உயிர்கள் இலங்கையில் அழிக்கப் பட்டது தெரியுமா?
எத்தனை மரங்கள் கோவையில் கொல்லப் பட்டது தெரியுமா?
அதனால் என்ன நடக்கப் போகிறது எனத் தெரியுமா?
விவசாயப் படுகொலைகள் பற்றித் தெரியுமா?
பட்டினி என்றால் என்னவென்றுத் தெரியுமா?
உழைக்கும் வர்க்கத்தின் நிலைத் தெரியுமா? என்றேன்.

என்னை ஏளனமாகப் பார்த்து விட்டு எதற்கும் பதில் சொல்லாமல் திரும்பிப் போனான்.

Friday, June 18, 2010

நெற்களஞ்சியம் இன்றைய நிலை...

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதைப் போன்ற ஒரு கேள்விதான் தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது? இதற்கான பதில் நேற்றுவரை தஞ்சை என்பதுதான். ஆனால், இனிமேல் இந்தப் பதிலைச் சொல்ல முடியுமா என்பதில் ஐயம் இருக்கிறது. ஏனென்றால், தஞ்சை டெல்டா பகுதியில் மிகக் குறைவாகவே குறுவை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது.

ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 3 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுவந்த நிலைமை கடந்த இரண்டு ஆண்டுகளாக மாறியிருக்கிறது. முந்தைய ஆண்டு 56,500 ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு 53,000 ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. அதிலும் குறிப்பாக, தஞ்சை டெல்டா மாவட்டப் பகுதிகளில் இந்த அளவு வெறும் 14,000 ஹெக்டேர் மட்டுமே.

இதற்குக் காரணமான மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படவில்லை என்பதாகக் கூறப்படுகிறது. குறைந்தபட்சம் 50 டிஎம்சி தண்ணீர் இருக்க வேண்டும் என்றும், தற்போது மேட்டூர் அணையில் 41 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதால், அணை திறக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. என்றாலும், இதையும் ஒரு காரணமாகக் கொள்ளலாமே தவிர, இதுவே முழுமையான காரணம் கிடையாது. சரியாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாத ஆண்டுகள் பல. தண்ணீர் திறக்கப்படுவது தாமதமானாலும்கூட, குறுவையை கிணற்றுப்பாசனம் அல்லது ஆழ்துளைக் கிணற்றுப் பாசனத்தை நம்பி தொடங்கிவிடுவார்கள். மேட்டூர் அணை தாமதத்தால் ஏற்படும் பாதிப்பு மிகக் குறைவாகவே இருந்து வந்தது.

மேலும், திறமையான பொறியாளர்கள் பொதுப்பணித் துறையில் முக்கிய பதவிகளில் இருக்கும்போது, இத்தகைய குறைபாடுகளைச் சரியாகக் கணித்து சீர்செய்த சம்பவங்களும் உண்டு. மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வர வேண்டுமென்றால், கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் துணை நதிகளில் உள்ள அணைகள் அனைத்திலும் உள்ள நீர் இருப்பு, அடுத்த சில வாரங்களில் பெய்யக்கூடிய மழையளவு, இதனால் கர்நாடக அரசு எத்தனை முயன்றாலும் முடியாமல் திறந்த ஆக வேண்டிய நீரின் அளவு அனைத்தையும் கணித்து, அணையில் தண்ணீர் இருப்புக் குறைவாக இருந்தாலும்கூட, திறந்துவிடச் செய்த காலமும் உண்டு. சில ஆண்டுகளில் சில பகுதிகளில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யும்படி அறிவுறுத்தப்பட்ட காலங்களும் உண்டு. ஆனால், இப்போது அத்தகைய எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் ஈடுபடுவதில்லை. அமைச்சர்களுக்கு இதுகுறித்து ஆலோசனைகளும் வழங்குவதில்லை. அமைச்சர்களுக்கும் இதை யோசிக்க நேரமில்லை.

அடுத்ததாக, நெல் சாகுபடிக்கு ஆகும் செலவினங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்பதும், அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாகுபடிக்கான விதைநெல் கொள்முதல், உரம், பண்ணை வேலையாள்களுக்குப் பெரும்தட்டுப்பாடு (மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டமும் சேர்ந்து கொள்கிறது) கரும்புக்குக் கொடுக்கப்படும் அதிக விலைபோல நெல்லுக்கு விலை கிடைப்பதில்லை என்ற மனக்கசப்பு ஆகிய இவை யாவும்தான் நெல் சாகுபடி பரப்பு குறைந்து வருவதற்குக் காரணம். பலர் கரும்பு சாகுபடிக்கு மாறி விட்டார்கள்.

தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குறைந்த பரப்பளவும்கூட, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீர் இறைக்க வாய்ப்புகள் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது. இவர்களில் இன்னும் பலர் ஆழ்துளைக் கிணற்று நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்ய முடியும் என்றாலும், கோடையின் மின்தடை விவசாயத்துக்கும் மிகப்பெரும் தடையாக இருக்கிறது.

குறுவை நெல் சாகுபடிக்கு ஏற்பட்டுள்ள இந்த "நோய்' வழக்கமான சம்பா சாகுபடிக்கும் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து அரசு இப்போதே இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசிப்பது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தின் பெருமையைத் தக்க வைத்துக்கொள்ள உதவும். குறிப்பாக, நெல் கொள்முதல் விலையை சாகுபடி செலவினங்களுக்கு ஏற்ப உயர்த்தித் தருவதுதான் மிக முக்கியமான நடவடிக்கையாக இருக்க முடியும்.

அடுத்ததாக, ஏதோ சில காரணங்களால், நெல் சாகுபடிப் பரப்பளவு குறைவதைப் போலவே ஒரு ஹெக்டேருக்கான நெல் உற்பத்தி அளவிலும்கூட குறைவுபட்டுக்கொண்டே வருகிறோம் என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. 2008-2009-ம் நிதியாண்டின் புள்ளிவிவரப்படி, தமிழக நெல் சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்குக் கிடைக்கும் நெல் உற்பத்தி 2,683 கிலோ மட்டுமே.அப்படியானால் மற்ற மாநிலங்களில் நெல் உற்பத்தி ஒரு ஹெக்டேருக்கு என்னவாக இருக்கிறது? தில்லியில் 4,243 கிலோ, பஞ்சாபில் 4,022 கிலோ, ஆந்திரத்தில் 3,246 கிலோ, அந்தமான் நிகோபார் தீவில் 2,797 கிலோ, ஹரியானாவில் 2,726 கிலோ, தமிழ்நாட்டில் 2,683 கிலோ. அதாவது இந்தியாவில் 7-வது இடத்தில் இருக்கின்றோம். (காவிரித் தண்ணீரை வம்படியாகப் பிடித்து வைத்துக் கொண்டுள்ள கர்நாடகம் 11-வது இடத்தில் இருக்கிறது. அங்கே, ஒரு ஹெக்டேருக்கு 2,511 கிலோ நெல் விளைகிறது).

தமிழ்நாட்டில் நெல் சாகுபடிப் பரப்பு குறையத் தொடங்கியுள்ளது. ஒரு ஹெக்டேருக்கான உற்பத்தி அளவும் குறைவாக இருக்கிறது. ஆனால், நியாயவிலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைப்பதும் சாத்தியமாகிறது. நெல்லை விளைவித்து, விற்றதும், விதைநெல்லும் போக, மீதமுள்ளதை வைத்து வயிறார உண்ட விவசாயி, ஒரு ரூபாய் அரிசிக்காக நியாயவிலைக் கடையில் காத்து நிற்கிறார்...

Saturday, June 12, 2010

சிந்தனை செய் மனமே...

இந்தியாவின் மிக முக்கியமான சிந்தனையாளரும் 'மைண்ட் ட்ரீ' நிறுவனத்தைத் தொடங்கியவருமான சுப்ரதோ பக்ஷியின் பேட்டி கொஞ்சம் கவனம் ஈர்க்கும் விதமாக இருந்தது. சமீப காலங்களில் உயர்பதவியில் இருப்போரிடமிருந்து இப்படியொரு சிறந்த பேட்டி வந்ததில்லை. என்னை போன்ற கோடானுகோடி இளைஞர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் விதமாகவே இருந்த அவரது விளக்கங்களின் தமிழாக்கம் கீழே...

உடல் உழைப்புக்கு மரியாதை வேண்டும்!

அன்றொருநாள் பெங்களூருவில் ஓர் இளைஞனைப் பார்த்தேன்... 21 வயதுதான் அவனுக்கு. கையில் உறையில்லை; காலில் செருப்பு இல்லை. ஆனாலும், யார் யாரோ வீசியெறிந்த குப்பையை கடமை உணர்வோடு அள்ளி, அந்த இடத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்தான். அவனுடைய ஒருநாள் சம்பளம் வெறும் 80 ரூபாய்தான்.

இன்னொருநாள், முக்கியமான அந்த மெட்ரோபாலிட்டன் நகரத்தில் வீட்டுவேலை செய்யும் ஒரு பெண்மணியைப் பார்த்தேன். ஒரு மணி நேரம் வேலை பார்த்தால் அவருக்குக் கிடைப்பது வெறும் 15 ரூபாய் மட்டுமே. உச்சி வெயில் என்றும் பார்க்காமல் நிலத்தை உழுது, விதையைத் தூவி, நமக்குத் தேவையான உணவைத் தயாரிக்கும் கிராமத்து விவசாயிகளைப் பாருங்கள். விஷத்துக்கு ஒப்பான ரசாயன உரத்தை வெறும் கைகளால் அவர்கள் அள்ளி வீசுகிறார்கள். அதற்குப் பலனாக அவர்களுக்குக் கிடைப்பது, நஷ்டம் மட்டுமே!

உடலால் உழைக்கிற இந்த மக்கள் மீது நமக்கு எந்த அக்கறையும் இல்லை. குப்பை அள்ளும் இளைஞன் முப்பது வயதில் அகால மரணம் அடைகிறான். வீட்டுவேலை செய்யும் பெண்ணின் குழந்தைக்கு நல்ல கல்வி கிடைப்பதில்லை. வயதான காலத்தில் வயிற்றைக் கழுவ அந்தப் பெண்ணுக்கு பென்ஷன் கிடையாது. திடீரென உடம்பு சரியில்லை என்றாலும் அந்தப் பெண் அரசு ஆஸ்பத்திரியை அண்டியிருக்க வேண்டிய கட்டாயம். ஏழை விவசாயி என்றும் ஏழையாகவே இருக்கிறான்.

உலகத்தின் பல நாடுகளுக்கும் போயிருக்கிறேன். நம் நாட்டில் மட்டுமே டாக்ஸி டிரைவர்கள் மிகக் கேவலமாக உடை உடுத்தும் நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் யார் யாரையோ தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குப் போகிறார்கள். ஆனால், ஒருநாள்கூட அவர்கள் தன் மனைவியையும் குழந்தைகளையும் அதே காரில் அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குச் செல்ல முடிவதே இல்லை. ஐந்து நட்சத்திர ஓட்டல் வேண்டாம்; வருடத்துக்கு ஒரு முறையாவது சுற்றுலா சென்று ஒரு பட்ஜெட் ஓட்டலில்கூட தங்க முடிவதில்லையே! ஏன்?

அனைவருக்கும் கல்வி வேண்டும்!

எல்லா வளர்ச்சிக்கும் அடிப்படையானது கல்வி. ஆனால், நாம் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாகியும் நம்மால் நூறு சதவிகித கல்வி கொண்டுவர முடியவில்லை. இதனால் மனிதசக்தியை மிகப்பெரிய அளவில் வீணாக்குகிறோம்.

இந்தியாவில் கல்வி தொடர்பாக இரண்டு பிரச்னைகள். ஒன்று, எல்லா குழந்தைகளுக்கும் ஏற்ற கல்வியை நம்மால் கொடுக்க முடியவில்லை. இரண்டு, தரம் குறைந்த கல்வி. நான்கூட சாதாரண பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தேன். ஆனால், தரமான கல்வியை நான் தேடிச் சென்றதற்குக் காரணம் கிடைத்ததை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு திருப்தி அடையும் சிந்தனை எங்களுக்கு இருந்ததில்லை என்பதால்தான். வாழ்க்கை பற்றிய முழுமையான புரிதலைக் கொடுக்கும் தீர்க்கதரிசனம்தான் கல்வி என்று நாங்கள் நினைத்தோமே ஒழிய, வெறும் எழுத்துக்களைப் படிப்பதால் வருவது அல்ல என்றே நாங்கள் நினைத்தோம்.

நம் கல்வியானது நாம் எங்கே இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு, தீர்க்கதரிசனத்தோடு எதிர்காலத்தை உருவாக்குகிற மாதிரியும் இல்லை. எல்லா நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழுகிற மாதிரி மனிதசக்தியை உருவாக்கும் ஓர் அமைப்பாகவும் இல்லை. நம்நாட்டின் மனித சக்தியை தொலைநோக்குப் பார்வையோடு வளரச்செய்து உலகத்துக்கு ஒரு புதிய நாகரிகத்தை அளிக்கவேண்டும். நம்மிடமிருந்து மிகப் பெரிதாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த உலகம். இந்த எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றத் தவறினோமெனில் தவறு நம் மீதுதானே ஒழிய, வேறு யார் மீதும் அல்ல.

நம் குழந்தைகள் வரலாற்றைப் பற்றி பக்கம் பக்கமாகப் படிக்கிறார்கள், வரலாறு என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளாமலே! மொழிப் பாடங்களை விழுந்து விழுந்து படிக்கிறார்கள், மொழியின் மீது எந்தக் காதலும் இல்லாமலே. நம் கட்டடக்கலை பற்றியோ, நம் மரங்கள், செடிகொடிகள் பற்றியோ, நம் கலாசாரத்தில் எந்த ஓர் அங்கத்தைப் பற்றியோ அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று நுட்பமாக பின்னப்பட்டிருக்கும் விதத்தை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. முழுக்க அறிவியல் கண்ணோட்டத்தையாவது வளர்த்துக்கொள்கிறார்களா, என்றால் அதுவும் இல்லை. ஆக மொத்தத்தில், கல்வி என்கிற பெயரில் சிறு மகிழ்ச்சி அடைந்துவிட்டு புதுமையாக எதுவும் செய்யாமல் திருப்தி பட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஊழலை ஒழிக்கவேண்டும்!

ஒருபக்கம் இந்தியா மிகப்பெரிய பணக்கார நாடு. இன்னொருபக்கம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் நாடு. இதற்குக் காரணம், ஊழல் என்கிற விஷம் இங்கே ஆழமாக வேரூன்றிப் போயிருக்கிறது. உலக நாடுகளில் ஊழல் பட்டியலை ஆண்டு தவறாமல் வெளியிடும் 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்கிற அமைப்பு 2006-ல் வெளியிட்ட அறிக்கைபடி, சின்னச் சின்ன அளவில் கொடுக்கப்படும் லஞ்சம் மட்டும் இந்தியாவில் 21,068 கோடி ரூபாய்.

இது மனித வளத்துக்காக நாம் செலவழிக்கும் தொகையைவிட 10% அதிகம். மத்திய அரசாங்கம் வசூலிக்கும் சேவை வரியைவிட 20% அதிகம். மத்திய அரசின் உதவி திட்டங்களைவிட 33% அதிகம். தொடக்கக் கல்விக்காக நாம் செலவழிக்கும் பணத்தைவிட இது இரண்டு மடங்கு அதிகம்! அறிவியல், தொழில்நுட்பத் துறைக்கு நாம் செய்யும் செலவைவிட இது 8 மடங்கு அதிகம். இந்தியாவின் நான்கு திசைகளையும் இணைக்கும் தங்க நாற்கரச் சாலையை அமைக்க இந்தத் தொகையைப் போல மூன்று மடங்கு அதிகத் தொகையை நாம் செலவழிக்கிறோம். அதாவது, மூன்று ஆண்டுகளில் நம்நாட்டில் கொடுக்கும் லஞ்சப் பணத்தை செலவழித்தால் இந்தியா முழுக்க சாலை வசதியைக் கொண்டு வந்துவிட முடியும். உலகத்தின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் போய்ப் பாருங்கள்; விமானங்களை வாங்குவதற்காக, ஆயுதங்களை வாங்குவதற்காக சன்மானம் எதையும் யாரும் வாங்குவதில்லை. வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் நாட்டுக்கு நீங்கள் ஒருமுறைப் போய்ப் பாருங்கள். பிறப்புச் சான்றிதழ் வாங்க, பாஸ்போர்ட் வாங்க, ரேஷன் கார்டு வாங்க, டிரைவிங் லைசென்ஸ் வாங்க, சொத்து வாங்க என்று எங்கேயும் அரசாங்கத்தின் இன்னொரு கேவலமான முகத்தை நீங்கள் பார்த்தாக வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்படவே ஏற்படாது. ஆனால், இந்தியாவில் அந்த முகத்தைப் பார்க்காமல் உங்களால் எந்த சின்ன காரியத்தையும் செய்யமுடியாது. அந்த அளவுக்கு அது சர்வ இடங்களிலும் வியாப்பித்துக் கிடக்கிறது.

பல ஆண்டுகளாகியும் என்னால் மறக்கவே முடியாத ஒரு சம்பவம்... ஹெளரா ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் நான் நடந்துகொண்டிருந்தேன். 15 வயது மதிக்கத்தக்க ஒரு பிச்சைக்காரச் சிறுமியிடம் பணத்தைப் பிடுங்கிக் கொண்டிருந்தான் ஒரு ரயில்வே பாதுகாப்பு போலீஸ்காரன். அந்தச் சிறுமிக்கு தொழுநோய் பிடித்ததிருந்ததைக்கூட அவன் சட்டை செய்யவே இல்லை. இதைப் பார்த்து வேதனைப்பட்டேன். ஆனால், சட்டத்துக்கு? இது ஒரு விஷயமே இல்லை.

அரசாங்கத்தின் அனைத்து அங்கங்களிலும் லஞ்சம் என்கிற விஷயம் பிரிக்கமுடியாமல் இரண்டறக் கலந்திருப்பதால் போலீஸிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் வரை யாருமே தங்கள் வேலையைச் சரியாகச் செய்ய முடிவதில்லை. இதனால் அதிருப்தி அடையும் மக்கள் அரசாங்கத்தை நிர்வாகம் செய்ய தெரியாதவர்களை நம்பி அவர்கள் பின்னால் போய் நிற்கிறார்கள்.''

என்ன எப்பிடி இருக்கிறது? தீர்கமான சிந்தனை... அனைவரும் இவ்வாறு சிந்திக்க முயற்சித்தாலே போதும்... விளைவுகள் தானாக நடக்கும்....

Thursday, June 10, 2010

நாளைய உணவு...

மீண்டும் மீண்டும் நான் பின்வரும் இந்த கருத்தை பதிவிடும் நோக்கமே, அதன் முக்கியத்துவத்தை பல பேருக்கு கொண்டு சேர்ப்பது தான்.

தயவு செய்து கொஞ்சம் சிந்தியுங்கள்...
என் மனதில் தோன்றியதை இங்கே பதிவிடுகிறேன்...

* இன்று எங்கள் கிராமத்தில் சுமார் 45-50 வயதுக்கு குறைவான யாரும் விவசாயத்தில் இல்லை.

* விவசாய நிலம் வைத்திருக்கும் குடும்பங்களிலிருந்து 35 வயதிற்குட்பட்ட எவர் ஒருவரும் இன்று விவசாயத்தில் இல்லவே இல்லை. ஒன்று படித்து வெளியூரில், வெளிநாட்டில் வேலையில் இருந்து நன்றாக பணம் சம்பாதிக்கிறார்கள் அல்லது பக்கத்து நகரங்களில் விவசாயம் தொடர்பில்லாத வியாபாரம், தொழிலில் இருக்கிறார்கள்.

* இன்று விவசாயம் நிலம் வைத்திருப்பவர் அல்லது விவசாய நிலத்தில் உழைப்போரின் ஒரே இலக்கு தன் பிள்ளைகளை எப்படியாவது நன்றாகப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் அல்லது ஒரு தொழில் ஆரம்பித்திட வேண்டும்.

*விளைவித்த தக்காளி கிலோ நாலாணாவிற்கு விற்க வேதனைப்பட்டு, கூடை கூடையாய், வருடா வருடம் நடுச் சாலையில் கொட்டி அழிக்கப்படும் அவலம் இன்றும் இருக்கத்தானே செய்கிறது. எந்த அரசாங்கம் அக்கறையோடு தேவையறிந்து, விவசாயிக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது அல்லது உதவியிருக்கிறது?

*எப்போது தேவை அதிகமாகும், எப்படி ஏற்றுமதி செய்வது அல்லது எப்படி அதை பதப்படுத்திப் பாதுகாத்து சரியான நேரத்தில் விற்பது என்று?
(2009 ஆம் ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் சர்க்கரைத் தட்டுப்பாடு வருமென்று, நிறைய வெளிநாட்டு விவசாயிகள் முன்னரே அறிந்து, அதிக விளைச்சலை உருவாக்கி, நமக்கு ஏற்றுமதி செய்திருக்கின்றனர்)*கடந்த பத்து ஆண்டுகளில் துவக்கப்பட்ட பொறியியல் கல்லூரி மற்றும் வியாபார மேலாண்மை படிப்புகளின் எண்ணிக்கையில் ஒரே ஒரு சதவிகிதமாவது விவசாயக் கல்லூரிக்கோ அல்லது விவசாயம் குறித்த படிப்புகளுக்கோ கவனம் கொடுக்கப் பட்டிருக்கிறதா?

இப்போது நிலம் வைத்திருப்போர் அல்லது உழைப்போரின் உழைக்கும் திறன் இன்னும் அதிகபட்சம் 10-15 ஆண்டுகளில் மங்கித்தானே போய்விடும். அதன்பின் அந்த நிலங்களில் யார் விவசாயம் செய்வது?

சமீபத்தில் கண்டமேனிக்கு திறக்கப்பட்டது பொறியியல் கல்லூரிகளே. சிவில் படித்தார்கள், சாரம் போட்டு வருடக்கணக்கில் கட்டியதை, இன்று எங்கேயோ செய்து பத்திரமாக எடுத்து வந்து கிரேன் வைத்து தூணின் மேல் ஏற்றி அழகாகப் பொருத்தி விட்டுப் போய்விடுகிறார்கள். ஆச்சரியமான ஒன்றுதான், தவறேதுமில்லை. இது போல் ஒவ்வொரு துறை பிரிவிலும் படித்தவர்கள் பிரமிக்கக்கூடிய அதிசயத்தை விநாடி நேரத்தில் நடத்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன என்னவோ படிப்பென்று சொல்லி, எத்தனை எத்தனையோ கல்லூரிகளைத் திறக்கப்பட்டதே... வளர்ச்சி என்ற அடிப்படையில், விவசாய பூமியை விலகிச் சென்ற மனிதர்களால் தங்கள் விஞ்ஞானத்தால், அரசியலால் அல்லது ஏதோ ஒரு தொழிலால் ஒரே ஒரு நெல் மணியை உருவாக்க முடியுமா?

ஐக்கிய நாடுகள் சபை ஒரு மனதி இறுதியில் 'இன்னும் நாற்பது வருடங்களில் இந்தியாவிலும், சீனாவிலும் தங்கள் நடவடிக்கையை மாற்றிக் கொள்ளாவிடில் மிகப் பெரிய உணவுத் தட்டுப்பாடு வருமென்று' சுட்டி காட்டி இருக்கிறது.. எனக்கென்னமோ அதற்கு நாற்பது வருடங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

காடுகளை அழிப்பதில் சிறிதும் குற்ற உணர்வில்லாத நாம், பருவ மழை பொய்த்துப் போவதைப் பற்றி என்றாவது, ஒரு விநாடி மனம் கலங்கியிருகிறோமா?

காமராஜருக்குப் பின் தமிழ்நாட்டில், யாராவது அணை கட்டியிருக்கிறார்களா?

சாகடிப்பட்ட அணைகள் ஒன்றா, இரண்டா? சாமாதி கட்டப்பட்ட ஏரிகள், குளங்கள் எத்தனை ஆயிரம் இருக்கும்?

இது பற்றி எந்தச் சிந்தனையும் இல்லாதவர்களைத் தானே மாற்றி மாற்றி ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கிறோம்.

விவசாயத்தை, விவசாயிகளை வஞ்சித்த உலகம் அதன் பலன்களை அனுபவிக்கப் போவது மிக அருகாமையில் தான் இருக்கிறது.

அப்போது பசிக்கும் வயிற்றுக்கு யார் வந்து சோறு போடுவது.

Tuesday, June 8, 2010

போபால் - புதைக்கப்பட்ட நீதி

போபால் விஷ வாயு விபத்து! விபத்து என்று தற்செயலாகச் சொல்ல முடியாத படி ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பொறுப்பற்ற நிர்வாகம் விளைவித்த கோரம், பதினைந்தாயிரம் மக்கள் மாண்டனர் ஐந்து லட்சம் பேர்களுக்கு மேல் பாதிக்கப் பட்டனர்.

செத்துப் போனவர்களைவிட இப்போது வாழ்பவர்கள் அங்கே கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று 1999-ம் ஆண்டு போபாலில் ஆய்வு நடத்திய கிரீன்பீஸ் அமைப்பு கூறியது.​ இன்னமும் அந்த மண்ணில் சயனைடு நஞ்சு கலந்து கிடப்பதாகவும்,​​ நீர்நிலைகளில் அந்த நச்சு எச்சம் இருப்பதாகவும் கூறியது.​ இருந்தும்கூட,​​ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.​

வாரன் ஆண்டர்சன், யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர், கைது செய்யப் படுகிறார்! வெறும் இரண்டாயிரம் டாலர் பிணைத் தொகையைக் கட்டிவிட்டு விடுவிக்கப் படுகிறார்.விசாரணைக்குத் திரும்புவதாக ஒரு வெற்று வாக்குறுதி! பத்தாவது குற்றவாளியாக யூனியன் கார்பைட் நிறுவனம்! தலைமறைவாக இருப்பதாக அறிவிக்கப் பட்ட ஆண்டர்சனை, நீதி மன்றத்தின் முன் கொண்டு வர இந்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதோடு மட்டுமில்லை, தன்னுடைய சொந்த ஜனங்களைப் பாதுகாக்க எந்த நிவாரண நடவடிக்கையையும் இந்திய அரசு முயற்சிக்கவே இல்லை.

ஆனால் மக்களுடைய கோபத்தைத் தணிக்க, தாங்கள் சட்ட பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக ஒரு நாடகத்தை இந்திய அரசு திட்டமிட்டே அரங்கேற்றிய மாதிரித் தான் பின்னால் நடந்த சம்பவங்கள் அத்தனையும் சுட்டிக் காட்டுகின்றன.
1986 இல் அமெரிக்க நீதி மன்றத்தில் இருந்த இந்த வழக்கு இந்தியாவுக்கு மாற்றப்பட்டதே, பாதிக்கப் பட்ட ஜனங்களுக்கு இழைக்கப் பட்ட மிகப் பெரிய துரோகம். அதைவிட, 3300 கோடி டாலர்கள் நஷ்ட ஈட்டைக் கோரி வழக்குத் தொடர்ந்தது இந்திய அரசு., மூன்று ஆண்டுகளுக்குப் பின்னால் 1989 இல் வெறும் நானூற்று எழுபது கோடி டாலர்களை நட்ட ஈடாகப்பெற்றுக் கொள்வதற்கு சம்மதிப்பதாக, நீதி மன்றத்திற்கு வெளியே செய்து கொள்ளப் பட்ட சமரசத் தீர்வாக இந்திய அரசு ஏற்றுக் கொண்டதற்குப் பின்னால் என்ன நடந்திருக்கும்?

நாட்டு நலனைப் பற்றிக் கவலைப்படாத அரசியல்வாதிகள், முதுகெலும்பில்லாத அரசு, அமெரிக்க நிர்பந்தத்தை எதிர்த்து நிற்க முடியாத கோழைத் தனம், அப்புறம் இருக்கவே இருக்கிறது, கண்ணசைவுக்கு ஆடினால் கிடைக்கும் சன்மானங்கள்!

உச்ச நீதிமன்றமே 1996 இல் இந்தக் குற்றச்சாட்டை நீர்த்துப் போகச் செய்கிற மாதிரியான ஒரு முடிவை எடுக்கிறது. வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்கு வரவழைக்க இந்திய அரசு அமெரிக்க நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது. வழக்கம் போலவே குளறுபடிகளுடன்! இருபது வருடங்களுக்குப் பின்னால் அமெரிக்க அரசு, அந்தக் கோரிக்கையில் ஏதேதோ ஓட்டை இருப்பதாக, மறுத்து விடுகிறது.

இந்தக் கண்ணராவிகள் எல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும்! சம்மதம் சொல்லி வாங்கினார்களே நட்ட ஈடு, அதையாவது பாதிக்கப் பட்டச மக்களுக்கு நிவாரணமாக வழங்கினார்களாமா?

அதுவும் இல்லை! இன்றைக்கு வரைக்கும் இல்லை! பெயரளவுக்கு ஒரு மருத்துவ மனை, சிகிச்சை என்று ஆரம்பித்ததோடு சரி! நட்ட ஈட்டை இன்னும் காலதாமதம் செய்யாமல் பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று இருபத்து நான்கு வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்றைக்கு சொல்லி இருக்கிறது!

நச்சுவாயுவின் கோரம் இறந்த பதினைந்தாயிரம் மக்களோடு முடிந்து விட்டதா? இல்லை! இன்னமும் பூட்டிக் கிடக்கும் யூனியன் கார்பைட் ஆலையின் உள்புறத்தில் பாதரச நஞ்சுக் கழிவுகள் இன்னமும் அகற்றப்படாமலேயே அப்படியே தான் இருக்கின்றன! கிரீன் பீஸ் இயக்கத்தினர் காட்டும் அக்கரையில் ஒரு கோடியில் ஒரு பங்கைக் கூட, இந்திய அரசு தன்னுடைய சொந்த ஜனங்களுடைய நலனில் காட்டவில்லை!

அரசியல் வாதிகளை நம்ப முடியவில்லை! அரசு இயந்திரம், ஊழியர்களை நம்பிப் பயனில்லை! நீதித் துறையாவது கொஞ்சம் நீதி கிடைக்கச் செய்யுமா என்று ஏங்கித் தவிப்பவர்களுக்கு, நீதித் துறையும் பலவீனப் பட்டுப் போயிருப்பதையே சமீப காலத் தீர்ப்புக்கள் காட்டிக் கொண்டிருக்கின்றன.

இதை இங்கே மீண்டும் மன்மோகன் சிங் நிறைவேற்றத் துடிக்கிற அணு உலை விபத்துக்கான நட்ட ஈட்டு மசோதாவோடு சேர்த்துப் பாருங்கள்!

அணுஉலைகள் விபத்து இழப்பீடு தொடர்பான மசோதாவுக்கு பரவலாக எழுந்த கடும் எதிர்ப்புகள் மிகமிக நியாயமானவை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது நேற்று வந்த தீர்ப்பு.

இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் சிக்கிக்கொண்டது காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய சறுக்கல். இவர்கள் செய்துவிட்டுப் போய் விடுகிற கிறுக்குத்தனங்களை, ஜனங்கள் அல்லவா சுமந்தாக வேண்டி இருக்கிறது?

பிரச்சினை வந்தால் சமாளிக்கும் திறமை, உறுதி, நேர்மை,அப்புறம் கொஞ்சமாவது முதுகெலும்பு இருக்கிறதா என்பதை அவர்கள் சொல்ல மாட்டார்கள். அவர்களுக்கே அது தெரியாது!