Saturday, August 1, 2009

அமெரிக்கா என்றொரு ஓநாய்

இந்திய விவசாயிகளுக்கு ஏற்றுமதிக்கான சந்தையும், வாய்ப்பும் விரிந்து கிடக்கிறது. அதற்கான ஒத்துழைப்பையும், தொழில்நுட்பத்தையும் அமெரிக்கா வழங்கும்" என்று தன்னுடைய சமீபத்திய இந்திய பயணத்தின்போது வாய் திறந்திருக்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன்.

"ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதக் கதை' தான் நினைவுக்கு வருகிறது.

உலகளவில் உணவு உற்பத்தியாகும் நிலப்பரப்பில் இந்தியாவின் பங்கு வெறும் 3%. உலக மக்கள் தொகையில் 17%. அதேசமயம், ஜி&8 என்று அழைக்கப்படும் பணக்கார நாடுகளின் உணவு உற்பத்தி 65%. அந்த 8 நாடுகளின் மொத்த மக்கள் வெறும் 14%.

அப்படி இருக்கும்போது யார் யாருக்கு ஏற்றுமதி செய்வது...?

அமெரிக்காவின் மக்காச்சோளத்தை ஐரோப்பா நிராகரித்து விட்டது. அத்தனையும் மரபணு மாற்றப்பட்ட பி.டி. மக்காச்சோளம். வேறு வழியே இல்லாமல், அதையெல்லாம் உயிரி எரிபொருளுக்கு (Bio-fuel) தள்ள வேண்டியதாகி விட்டது. அபரிமிதமாக விளைந்து கிடக்கும் அந்த அமெரிக்கக் குப்பைக்கு ஒரு போக்கிடம்... அதாவது, சந்தை வேண்டும். அதற்கு இந்தியாதான் சரியான சந்தை என்று அமெரிக்கா கணித்து இருக்கிறது. இந்தியாவை வீழ்த்தத்தான் வஞ்சக வலையோடு ஹிலாரி கிளின்டன் வேட்டைக்கு புறப்பட்டு இருக்கிறார்.

"இந்தியாவும், அமெரிக்காவும் விவசாயத்தில் நெருங்கி விட்டது. மேலும் நெருங்கிச் செயல்படும்" என்று சொல்லி, தான் வந்த நோக்கத்தை தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில், வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள உலக வர்த்தக மந்திரிகள் மாநாட்டில், விவசாயத்தை உலக வர்த்தகத்தில் எப்படியாவது சேர்த்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது அமெரிக்கா.

அதுமட்டும் நடந்துவிட்டால்... மானிய விலையில் விளைந்த மலிவு விலை தானியங்கள் இந்தியச் சந்தையில் குவிந்து, உள்ளூர் விவசாயிகளின் சாவு எண்ணிக்கைக் கூடும். மரபு அணுமாற்றப்பட்ட விதை குவிய ஆரம்பித்து பாரம்பர்ய விதைகள் முற்றிலுமாக அழித்தொழிக்கப்படும்.

வருங்காலத்தில், பருப்புக்கும் எண்ணெய்க்கும் மட்டுமல்ல, அரிசிக்கும், கோதுமைக்கும்கூட திருவோடு தூக்க வேண்டிய ஆபத்து வந்துவிடும்.

"பக்கத்துவீட்டில்தானே புகைகிறது. நான் நிம்மதியாக தூங்கப் போறேன்' என்று நினைத்து நீங்கள் ஒதுங்கியிருந்தால்... உங்களை மட்டுமல்ல, ஊரையும் எரிக்கவே செய்யும் அமெரிக்கா பற்ற வைத்திருக்கும் இந்த வியாபார நெருப்பு!

2 comments:

NareshKumar said...

Superb blog boss........Really as you know I don't have time to check our news/tamil news but really your blog is fine keep on updating.....I will try to create some blog !!! and always your Fan....

ஸ்ரீராம் எனும் சாமான்யன்… said...

மிக்க நன்றி நரேஷ்.
இது போல் கருத்து தெரிவித்தால் தான்,எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
இல்லை என்றால் பார்வையாளர்கள் படிக்கிறார்களா என்றே தெரிவதில்லை.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.