Tuesday, June 22, 2010
தமிழ் செம்மொழி மாநாடு
இதில் 118 கோடி ரூபாய் 3840 அடுக்ககங்கள் அமைப்பதற்கும், 59.85 கோடி சாலை சீரமைப்பு பணிகளுக்கும் பயன் படுத்தப் படுகின்றனவாம். மேலும் அங்கு பாதுகாப்பு பணிக்காக ஒரு பலூனில் நான்கு கேமராக்கள் பொருத்தப் பட்டு விண்ணில் பறக்க விடப் பட்டுள்ளது. ஒரு கேமராவின் விலை மட்டும் 50 லகரம்.
இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் 200 கோடி என்பது சும்மா என்றே தோன்றுகிறது. எத்தனை கோடிகள் ஆனதோ? இன்னும் எத்தனை ஆகுமோ? நாட்டில் விவசாயப் படுகொலைகள், பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இப்படிப் பட்ட மாநாடு இவ்வளவு பொருட் செலவில் தேவைதானா?
3840 அடுக்ககங்கள் இவ்வளவு விரைவில் சாத்தியமாகும் போது ஏழை மக்களுக்கும், சுனாமியால் வீடிழந்தோருக்கும் கட்டிக் கொடுக்கப் படும் வீடுகள் மட்டும் ஏன் வருடக் கணக்காகிறது?
இத்தனை கோடிகள் செலவில் இவ்வளவு நாள் கவனிப்பாறற்றுக் கிடந்த சாலைகள் துரிதமாக சீரமைக்கப் படும் போது, இவ்வளவு நாள் செய்யப் படாதது ஏன்?
இதுவரை சாலைகள் சீரமைப்பு என்ற பெயரில் கோவையை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப் பட்டிருக்கின்றன.ஊட்டி சாலையில் 600க்கும் மேற்பட்ட மரங்களும், திருச்சி செல்லும் சாலையில் 200க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டித் தள்ளியிருக்கின்றனர். இங்கு வெட்டப் பட்டவை வெறும் மரங்கள் அல்ல. நம் மனிதமும் தான்.
மரங்களைக் கொன்று இப்படி ஒரு விழா தேவைதானா? மரங்களுக்காக மக்கள் ஏங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கும் போது இவ்வளவு மரங்கள் கொலை செய்யப் பட்டு ஒரு தலைவனின் ஆசைக்கு விழா எடுப்பது நியாயம் தானா?
"ஒரு பக்கத்து மரங்களை மட்டும் வெட்ட சொல்லிருக்கோம், தேவைப் பட்டா இன்னொருப் பக்க மரத்தையும் வெட்ட சொல்லிருக்கொம்" என கலக்டர் முன்னர் கூறியிருந்தார். மரங்களை வெட்டி மனிதம் அழிக்கும் இந்த மிருகப் பணிக்கு எடுக்கப் படும் விழாவிற்கு பெயர் "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு".
இதெல்லாம் பார்த்தப் பின்பும் நம் மக்கள் ஒரு ரூபாய் அரிக்காகவும், ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத கலர் டி.விக்காகவும் மீண்டும் வாககளிக்கப் போவது உறுதியே. என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தேர்தலின் போது என்ன சொல்லி ஓட்டு வாங்கலாம் என்பது அந்த அரசியல்வியாதிகளுக்குத் தெரியும்.
"இந்த மாநாட்டின் மூலம் எத்தனைப் பேருக்கு வேலைக் கிடைச்சிருக்குத் தெரியுமா?" என என் நண்பன் கேட்டான்.
எத்தனை பேருக்கு?
எவ்வளவு நாளைக்கு?
எவ்வளவு ரூபாய்க்கு? என்றேன்.
அவனிடம் பதிலில்லை.
எத்தனை உயிர்கள் இலங்கையில் அழிக்கப் பட்டது தெரியுமா?
எத்தனை மரங்கள் கோவையில் கொல்லப் பட்டது தெரியுமா?
அதனால் என்ன நடக்கப் போகிறது எனத் தெரியுமா?
விவசாயப் படுகொலைகள் பற்றித் தெரியுமா?
பட்டினி என்றால் என்னவென்றுத் தெரியுமா?
உழைக்கும் வர்க்கத்தின் நிலைத் தெரியுமா? என்றேன்.
என்னை ஏளனமாகப் பார்த்து விட்டு எதற்கும் பதில் சொல்லாமல் திரும்பிப் போனான்.
Friday, June 18, 2010
நெற்களஞ்சியம் இன்றைய நிலை...
ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 3 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுவந்த நிலைமை கடந்த இரண்டு ஆண்டுகளாக மாறியிருக்கிறது. முந்தைய ஆண்டு 56,500 ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு 53,000 ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. அதிலும் குறிப்பாக, தஞ்சை டெல்டா மாவட்டப் பகுதிகளில் இந்த அளவு வெறும் 14,000 ஹெக்டேர் மட்டுமே.
இதற்குக் காரணமான மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படவில்லை என்பதாகக் கூறப்படுகிறது. குறைந்தபட்சம் 50 டிஎம்சி தண்ணீர் இருக்க வேண்டும் என்றும், தற்போது மேட்டூர் அணையில் 41 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதால், அணை திறக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. என்றாலும், இதையும் ஒரு காரணமாகக் கொள்ளலாமே தவிர, இதுவே முழுமையான காரணம் கிடையாது. சரியாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாத ஆண்டுகள் பல. தண்ணீர் திறக்கப்படுவது தாமதமானாலும்கூட, குறுவையை கிணற்றுப்பாசனம் அல்லது ஆழ்துளைக் கிணற்றுப் பாசனத்தை நம்பி தொடங்கிவிடுவார்கள். மேட்டூர் அணை தாமதத்தால் ஏற்படும் பாதிப்பு மிகக் குறைவாகவே இருந்து வந்தது.
மேலும், திறமையான பொறியாளர்கள் பொதுப்பணித் துறையில் முக்கிய பதவிகளில் இருக்கும்போது, இத்தகைய குறைபாடுகளைச் சரியாகக் கணித்து சீர்செய்த சம்பவங்களும் உண்டு. மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வர வேண்டுமென்றால், கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் துணை நதிகளில் உள்ள அணைகள் அனைத்திலும் உள்ள நீர் இருப்பு, அடுத்த சில வாரங்களில் பெய்யக்கூடிய மழையளவு, இதனால் கர்நாடக அரசு எத்தனை முயன்றாலும் முடியாமல் திறந்த ஆக வேண்டிய நீரின் அளவு அனைத்தையும் கணித்து, அணையில் தண்ணீர் இருப்புக் குறைவாக இருந்தாலும்கூட, திறந்துவிடச் செய்த காலமும் உண்டு. சில ஆண்டுகளில் சில பகுதிகளில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யும்படி அறிவுறுத்தப்பட்ட காலங்களும் உண்டு. ஆனால், இப்போது அத்தகைய எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் ஈடுபடுவதில்லை. அமைச்சர்களுக்கு இதுகுறித்து ஆலோசனைகளும் வழங்குவதில்லை. அமைச்சர்களுக்கும் இதை யோசிக்க நேரமில்லை.
அடுத்ததாக, நெல் சாகுபடிக்கு ஆகும் செலவினங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்பதும், அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாகுபடிக்கான விதைநெல் கொள்முதல், உரம், பண்ணை வேலையாள்களுக்குப் பெரும்தட்டுப்பாடு (மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டமும் சேர்ந்து கொள்கிறது) கரும்புக்குக் கொடுக்கப்படும் அதிக விலைபோல நெல்லுக்கு விலை கிடைப்பதில்லை என்ற மனக்கசப்பு ஆகிய இவை யாவும்தான் நெல் சாகுபடி பரப்பு குறைந்து வருவதற்குக் காரணம். பலர் கரும்பு சாகுபடிக்கு மாறி விட்டார்கள்.
தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குறைந்த பரப்பளவும்கூட, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீர் இறைக்க வாய்ப்புகள் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது. இவர்களில் இன்னும் பலர் ஆழ்துளைக் கிணற்று நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்ய முடியும் என்றாலும், கோடையின் மின்தடை விவசாயத்துக்கும் மிகப்பெரும் தடையாக இருக்கிறது.
குறுவை நெல் சாகுபடிக்கு ஏற்பட்டுள்ள இந்த "நோய்' வழக்கமான சம்பா சாகுபடிக்கும் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து அரசு இப்போதே இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசிப்பது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தின் பெருமையைத் தக்க வைத்துக்கொள்ள உதவும். குறிப்பாக, நெல் கொள்முதல் விலையை சாகுபடி செலவினங்களுக்கு ஏற்ப உயர்த்தித் தருவதுதான் மிக முக்கியமான நடவடிக்கையாக இருக்க முடியும்.
அடுத்ததாக, ஏதோ சில காரணங்களால், நெல் சாகுபடிப் பரப்பளவு குறைவதைப் போலவே ஒரு ஹெக்டேருக்கான நெல் உற்பத்தி அளவிலும்கூட குறைவுபட்டுக்கொண்டே வருகிறோம் என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. 2008-2009-ம் நிதியாண்டின் புள்ளிவிவரப்படி, தமிழக நெல் சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்குக் கிடைக்கும் நெல் உற்பத்தி 2,683 கிலோ மட்டுமே.அப்படியானால் மற்ற மாநிலங்களில் நெல் உற்பத்தி ஒரு ஹெக்டேருக்கு என்னவாக இருக்கிறது? தில்லியில் 4,243 கிலோ, பஞ்சாபில் 4,022 கிலோ, ஆந்திரத்தில் 3,246 கிலோ, அந்தமான் நிகோபார் தீவில் 2,797 கிலோ, ஹரியானாவில் 2,726 கிலோ, தமிழ்நாட்டில் 2,683 கிலோ. அதாவது இந்தியாவில் 7-வது இடத்தில் இருக்கின்றோம். (காவிரித் தண்ணீரை வம்படியாகப் பிடித்து வைத்துக் கொண்டுள்ள கர்நாடகம் 11-வது இடத்தில் இருக்கிறது. அங்கே, ஒரு ஹெக்டேருக்கு 2,511 கிலோ நெல் விளைகிறது).
தமிழ்நாட்டில் நெல் சாகுபடிப் பரப்பு குறையத் தொடங்கியுள்ளது. ஒரு ஹெக்டேருக்கான உற்பத்தி அளவும் குறைவாக இருக்கிறது. ஆனால், நியாயவிலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைப்பதும் சாத்தியமாகிறது. நெல்லை விளைவித்து, விற்றதும், விதைநெல்லும் போக, மீதமுள்ளதை வைத்து வயிறார உண்ட விவசாயி, ஒரு ரூபாய் அரிசிக்காக நியாயவிலைக் கடையில் காத்து நிற்கிறார்...
Saturday, June 12, 2010
சிந்தனை செய் மனமே...
உடல் உழைப்புக்கு மரியாதை வேண்டும்!
அன்றொருநாள் பெங்களூருவில் ஓர் இளைஞனைப் பார்த்தேன்... 21 வயதுதான் அவனுக்கு. கையில் உறையில்லை; காலில் செருப்பு இல்லை. ஆனாலும், யார் யாரோ வீசியெறிந்த குப்பையை கடமை உணர்வோடு அள்ளி, அந்த இடத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்தான். அவனுடைய ஒருநாள் சம்பளம் வெறும் 80 ரூபாய்தான்.
இன்னொருநாள், முக்கியமான அந்த மெட்ரோபாலிட்டன் நகரத்தில் வீட்டுவேலை செய்யும் ஒரு பெண்மணியைப் பார்த்தேன். ஒரு மணி நேரம் வேலை பார்த்தால் அவருக்குக் கிடைப்பது வெறும் 15 ரூபாய் மட்டுமே. உச்சி வெயில் என்றும் பார்க்காமல் நிலத்தை உழுது, விதையைத் தூவி, நமக்குத் தேவையான உணவைத் தயாரிக்கும் கிராமத்து விவசாயிகளைப் பாருங்கள். விஷத்துக்கு ஒப்பான ரசாயன உரத்தை வெறும் கைகளால் அவர்கள் அள்ளி வீசுகிறார்கள். அதற்குப் பலனாக அவர்களுக்குக் கிடைப்பது, நஷ்டம் மட்டுமே!
உடலால் உழைக்கிற இந்த மக்கள் மீது நமக்கு எந்த அக்கறையும் இல்லை. குப்பை அள்ளும் இளைஞன் முப்பது வயதில் அகால மரணம் அடைகிறான். வீட்டுவேலை செய்யும் பெண்ணின் குழந்தைக்கு நல்ல கல்வி கிடைப்பதில்லை. வயதான காலத்தில் வயிற்றைக் கழுவ அந்தப் பெண்ணுக்கு பென்ஷன் கிடையாது. திடீரென உடம்பு சரியில்லை என்றாலும் அந்தப் பெண் அரசு ஆஸ்பத்திரியை அண்டியிருக்க வேண்டிய கட்டாயம். ஏழை விவசாயி என்றும் ஏழையாகவே இருக்கிறான்.
உலகத்தின் பல நாடுகளுக்கும் போயிருக்கிறேன். நம் நாட்டில் மட்டுமே டாக்ஸி டிரைவர்கள் மிகக் கேவலமாக உடை உடுத்தும் நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் யார் யாரையோ தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குப் போகிறார்கள். ஆனால், ஒருநாள்கூட அவர்கள் தன் மனைவியையும் குழந்தைகளையும் அதே காரில் அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குச் செல்ல முடிவதே இல்லை. ஐந்து நட்சத்திர ஓட்டல் வேண்டாம்; வருடத்துக்கு ஒரு முறையாவது சுற்றுலா சென்று ஒரு பட்ஜெட் ஓட்டலில்கூட தங்க முடிவதில்லையே! ஏன்?
அனைவருக்கும் கல்வி வேண்டும்!
எல்லா வளர்ச்சிக்கும் அடிப்படையானது கல்வி. ஆனால், நாம் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாகியும் நம்மால் நூறு சதவிகித கல்வி கொண்டுவர முடியவில்லை. இதனால் மனிதசக்தியை மிகப்பெரிய அளவில் வீணாக்குகிறோம்.
இந்தியாவில் கல்வி தொடர்பாக இரண்டு பிரச்னைகள். ஒன்று, எல்லா குழந்தைகளுக்கும் ஏற்ற கல்வியை நம்மால் கொடுக்க முடியவில்லை. இரண்டு, தரம் குறைந்த கல்வி. நான்கூட சாதாரண பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தேன். ஆனால், தரமான கல்வியை நான் தேடிச் சென்றதற்குக் காரணம் கிடைத்ததை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு திருப்தி அடையும் சிந்தனை எங்களுக்கு இருந்ததில்லை என்பதால்தான். வாழ்க்கை பற்றிய முழுமையான புரிதலைக் கொடுக்கும் தீர்க்கதரிசனம்தான் கல்வி என்று நாங்கள் நினைத்தோமே ஒழிய, வெறும் எழுத்துக்களைப் படிப்பதால் வருவது அல்ல என்றே நாங்கள் நினைத்தோம்.
நம் கல்வியானது நாம் எங்கே இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு, தீர்க்கதரிசனத்தோடு எதிர்காலத்தை உருவாக்குகிற மாதிரியும் இல்லை. எல்லா நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழுகிற மாதிரி மனிதசக்தியை உருவாக்கும் ஓர் அமைப்பாகவும் இல்லை. நம்நாட்டின் மனித சக்தியை தொலைநோக்குப் பார்வையோடு வளரச்செய்து உலகத்துக்கு ஒரு புதிய நாகரிகத்தை அளிக்கவேண்டும். நம்மிடமிருந்து மிகப் பெரிதாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த உலகம். இந்த எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றத் தவறினோமெனில் தவறு நம் மீதுதானே ஒழிய, வேறு யார் மீதும் அல்ல.
நம் குழந்தைகள் வரலாற்றைப் பற்றி பக்கம் பக்கமாகப் படிக்கிறார்கள், வரலாறு என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளாமலே! மொழிப் பாடங்களை விழுந்து விழுந்து படிக்கிறார்கள், மொழியின் மீது எந்தக் காதலும் இல்லாமலே. நம் கட்டடக்கலை பற்றியோ, நம் மரங்கள், செடிகொடிகள் பற்றியோ, நம் கலாசாரத்தில் எந்த ஓர் அங்கத்தைப் பற்றியோ அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று நுட்பமாக பின்னப்பட்டிருக்கும் விதத்தை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. முழுக்க அறிவியல் கண்ணோட்டத்தையாவது வளர்த்துக்கொள்கிறார்களா, என்றால் அதுவும் இல்லை. ஆக மொத்தத்தில், கல்வி என்கிற பெயரில் சிறு மகிழ்ச்சி அடைந்துவிட்டு புதுமையாக எதுவும் செய்யாமல் திருப்தி பட்டுக்கொண்டிருக்கிறோம்.
ஊழலை ஒழிக்கவேண்டும்!
ஒருபக்கம் இந்தியா மிகப்பெரிய பணக்கார நாடு. இன்னொருபக்கம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் நாடு. இதற்குக் காரணம், ஊழல் என்கிற விஷம் இங்கே ஆழமாக வேரூன்றிப் போயிருக்கிறது. உலக நாடுகளில் ஊழல் பட்டியலை ஆண்டு தவறாமல் வெளியிடும் 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்கிற அமைப்பு 2006-ல் வெளியிட்ட அறிக்கைபடி, சின்னச் சின்ன அளவில் கொடுக்கப்படும் லஞ்சம் மட்டும் இந்தியாவில் 21,068 கோடி ரூபாய்.
இது மனித வளத்துக்காக நாம் செலவழிக்கும் தொகையைவிட 10% அதிகம். மத்திய அரசாங்கம் வசூலிக்கும் சேவை வரியைவிட 20% அதிகம். மத்திய அரசின் உதவி திட்டங்களைவிட 33% அதிகம். தொடக்கக் கல்விக்காக நாம் செலவழிக்கும் பணத்தைவிட இது இரண்டு மடங்கு அதிகம்! அறிவியல், தொழில்நுட்பத் துறைக்கு நாம் செய்யும் செலவைவிட இது 8 மடங்கு அதிகம். இந்தியாவின் நான்கு திசைகளையும் இணைக்கும் தங்க நாற்கரச் சாலையை அமைக்க இந்தத் தொகையைப் போல மூன்று மடங்கு அதிகத் தொகையை நாம் செலவழிக்கிறோம். அதாவது, மூன்று ஆண்டுகளில் நம்நாட்டில் கொடுக்கும் லஞ்சப் பணத்தை செலவழித்தால் இந்தியா முழுக்க சாலை வசதியைக் கொண்டு வந்துவிட முடியும். உலகத்தின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் போய்ப் பாருங்கள்; விமானங்களை வாங்குவதற்காக, ஆயுதங்களை வாங்குவதற்காக சன்மானம் எதையும் யாரும் வாங்குவதில்லை. வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் நாட்டுக்கு நீங்கள் ஒருமுறைப் போய்ப் பாருங்கள். பிறப்புச் சான்றிதழ் வாங்க, பாஸ்போர்ட் வாங்க, ரேஷன் கார்டு வாங்க, டிரைவிங் லைசென்ஸ் வாங்க, சொத்து வாங்க என்று எங்கேயும் அரசாங்கத்தின் இன்னொரு கேவலமான முகத்தை நீங்கள் பார்த்தாக வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்படவே ஏற்படாது. ஆனால், இந்தியாவில் அந்த முகத்தைப் பார்க்காமல் உங்களால் எந்த சின்ன காரியத்தையும் செய்யமுடியாது. அந்த அளவுக்கு அது சர்வ இடங்களிலும் வியாப்பித்துக் கிடக்கிறது.
பல ஆண்டுகளாகியும் என்னால் மறக்கவே முடியாத ஒரு சம்பவம்... ஹெளரா ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் நான் நடந்துகொண்டிருந்தேன். 15 வயது மதிக்கத்தக்க ஒரு பிச்சைக்காரச் சிறுமியிடம் பணத்தைப் பிடுங்கிக் கொண்டிருந்தான் ஒரு ரயில்வே பாதுகாப்பு போலீஸ்காரன். அந்தச் சிறுமிக்கு தொழுநோய் பிடித்ததிருந்ததைக்கூட அவன் சட்டை செய்யவே இல்லை. இதைப் பார்த்து வேதனைப்பட்டேன். ஆனால், சட்டத்துக்கு? இது ஒரு விஷயமே இல்லை.
அரசாங்கத்தின் அனைத்து அங்கங்களிலும் லஞ்சம் என்கிற விஷயம் பிரிக்கமுடியாமல் இரண்டறக் கலந்திருப்பதால் போலீஸிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் வரை யாருமே தங்கள் வேலையைச் சரியாகச் செய்ய முடிவதில்லை. இதனால் அதிருப்தி அடையும் மக்கள் அரசாங்கத்தை நிர்வாகம் செய்ய தெரியாதவர்களை நம்பி அவர்கள் பின்னால் போய் நிற்கிறார்கள்.''
என்ன எப்பிடி இருக்கிறது? தீர்கமான சிந்தனை... அனைவரும் இவ்வாறு சிந்திக்க முயற்சித்தாலே போதும்... விளைவுகள் தானாக நடக்கும்....