இதுவரை வலைத்தளத்திற்கு வந்துபோனவர்கள் 2000 திற்கு மேல். ஆனால் மறுமொழி மற்றும் கருத்து கூறியவர்கள் ஓரிருவரே. கைதட்டலோ,வாயார திட்டோ சொன்னால் தான் தெரியும்.
ஏன்டா இப்படி புலம்பர, உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையா, போடா லூசு, ஆமாம் நானும் இத பத்தி யோசிச்சிருக்கேன் என எப்படி வேண்டுமானாலும் எது தோணுதோ அதை கூறுங்கள். இல்லை என்றால் நீங்கள் படிக்கிறீர்களா ? இல்லையா ? என்றே தெரிவதில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆகிவிடும்.

அப்புறம் இந்த நேரத்தில் மற்றுமொரு செய்தியையும் உங்கள் முன் எடுத்துரைக்க கடமை பட்டுள்ளேன். எவ்வளவு நாள் தான் நாமும் நாடு சரி இல்லை, மக்கள் சரி இல்லை என புலம்புவது என்றெண்ணி ஒரு முடிவுக்கு வந்தவனாய் பூஜை விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருந்தேன். வீட்டில் மெதுவாக இந்த விஷயத்தை ஆரம்பித்தேன் பின்வருமாறு.
"ஏம்ப்பா எவ்ளோ நாள் தான் நீங்களும் கஷ்டபடுவீங்க, வயசும் ஆகி போச்சு, பேசாம ரெஸ்ட் எடுங்க."
குழப்பமும் கேள்வியும் கலந்த ஒரு பார்வை பதிலாக கிடைத்தது.
மேலும் தைரியத்தை வரவழைத்துகொண்டு "இல்லப்பா வர வர வேலை ஆளும் கிடைக்க மாட்றாங்க, கரண்டும் கிடைக்க மாட்டேங்குது, விவசாயம் அளிஞ்சிட்டே வருது. இப்படி படிச்ச அடுத்த தலைமுறை எல்லாம் நகரத்துக்கே புழைக்க போயிட்டா, கிராமம் என்னாவது ? விவசாயம் என்னாவது ? என்றேன்.
"சரி அதுக்கு என்ன பன்னனும்கர ? " இது அப்பா.
"அதனால வேலைய விட்டுட்டு ஊருக்கே வந்திரலாம்னு பார்க்கிறேன்."
"வந்து..." கோவத்துடன் இடை மறித்தார் அப்பா.
"விவசாயம் தான் பார்பேன் வேற என்ன செய்வேன் ? " எனக்கும் கோபம் சற்றே எட்டிபர்த்தது.
இப்படியே தொடர்ந்தது வாக்கு வாதம். முடிவில் பைத்தியமாடா உனக்கு என அம்மாவும், அங்கேயே நல்ல படியா settle ஆகுற வழிய பாரு என சித்தியும், B.E. படிச்சிட்டு உனக்கு ஏன்டா இந்த வேலை என ஊர்கார நண்பனும் அறிவுரை வழங்க சற்றே குழப்பத்துடன் முடிவடைந்தது எனது ஊர் பயணம்.
விளைவு, நான் பெங்களூர் வந்த மறு நாளே சித்தப்பாவை அழைத்துக் கொண்டு ஏதோ ஒரு ஜோசியரிடம் எனது ஜாதகத்தை குறித்து கொண்டு வந்து விட்டார் எனது அப்பா. இனி பெண் பார்க்கும் படலம் தீவிரமாகும். அம்மா,அக்காவுடனான தொலைபேசி உரையாடல்கள் நீளமாகும்.
பிள்ளையார் புடிக்க போய் குரங்கு வந்து விட்டது.
என்ன தான் ஆனாலும் கிராமம்,விவசாயம் மீதான எனது காதல் கொஞ்சமும் குறையாது. எனது இறுதி நாட்கள் நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் தான் என்பதையும், எனது குல தொழில் வேளாண்மையை மறக்க முடியாதென்பதையும் தெளிவு படுத்துகிறேன்.
ஏதோ சொல்லவேண்டும் என தோன்றியதால் இந்த பதிவு.
இந்த நூறு போல 200,300, என சமூக அவலங்கள் பற்றிய எனது நிலைபாடு, எண்ணம், கோவம் , ஏக்கம் என அனைத்தையும் உங்கள் பார்வைக்கு சமர்பிர்பேன்.
நன்றிகளோடு உங்கள் கருத்தை,மறுமொழியை எதிர்நோக்கும் சாமானியன் ஒன்பத்துவேளியிலிருந்து.